தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் மீது கொலைவெறி தாக்குதல்.. நாக்பூர் ரயில் நிலையத்தில் தமிழர் உட்பட இருவர் பலி

நாக்பூர் ரயில் நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் மீது மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர் நடத்திய தாக்குதலில் தமிழர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 7 hours ago

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat)

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் ரயில் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் திடீரென கட்டையால் தாக்கியதில், நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்த தமிழர் உட்பட இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திங்கட்கிழமை (நேற்று) அதிகாலை, நாக்பூர் ரயில் நிலையத்தில் உள்ள 7வது நடைமேடையில் ரயிலுக்காக பயணிகள் காத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு திடீரென வந்த மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர், நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்த 6 முதல் 7 நபர்கள் மீது மரத்தால் ஆன ஒருவித கட்டையைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்ததாக பயணிகள் தெரிவிக்கின்றனர். அப்போது, வலி தாங்காமல் அவர்கள் அலறி கதறியுள்ளனர். அந்த அலறல் சத்தம் கேட்டு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து பயணிகளை மீட்டதுடன், தாக்குதல் நடத்திவிட்டு தப்ப முயன்ற நபரையும் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர். இந்நிகழ்வு ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்களைப் பீதியடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க: செங்கல் சூளையில் தேங்கிய நீரில் மூழ்கி அண்ணன் - தங்கை உயிரிழப்பு!

அந்த தாக்குதலில் 2 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன், 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். பின்னர், காயமடைந்த நபர்களை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த நபர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கணேஷ் குமார்(40) என்பதும், மற்றொருவர் நபரின் விவரம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர் ஜெயராம் ராமாவதார் கேவட் (35 வயது) என்பதும் தெரிய வந்துள்ளது. தற்போது இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும், சாட்சிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதுவரை அந்த தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து நாக்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details