பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவின் 9வது நாளில் இந்திய வீரர்கள் பல்வேறு போட்டி தொடர்களில் பங்கேற்கின்றனர். முன்னதாக நேற்று (ஆக.3) துப்பாக்கிச் சுடுதல் மற்றும் வில்வித்தையில் பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். அதேபோல் மகளிர் வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரியும் தோல்வியை தழுவினார். இன்று 9வது நாளில், இந்தியா பதக்கம் வெல்லும் வய்ப்புகள் அதிகளவில் உள்ளன.
பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் அரைஇறுதியில் இன்று விளையாடுகிறார். இன்றைய ஆட்டத்தில் அவர் வெல்லும் பட்சத்தில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகும். பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரின் 9வது நாளில் என்னென்ன போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறித்த முழுமையான அட்டவணையை காணலாம்.
துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 25 மீட்டர் ரேபிட் பயர் ஆடவர் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் விஜய்வீர் சித்து மற்றும் அனிஷ் பன்வாலா கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல் மகளிர் பிரிவில், ரைசா தில்லான் மற்றும் மகேஸ்வரி சௌஹான் ஸ்கீட் தகுதிப் போட்டியின் கலந்து கொள்கின்றனர். இதில் ஆடவர் 25 மீட்டர் ரேபிட் பயர் தகுதிச் சுற்று மதியம் 12:30 மணிக்கும், ஸ்கீட் மகளிர் தகுதி சுற்று மதியம் 1 மணி நடைபெற உள்ளது.
ஹாக்கி: 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 9வது நாளில் இந்திய ஹாக்கி அணி காலிறுதியில் கிரேட் பிரிட்டனை எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
குரூப் பிரிவில் இந்தியா மொத்தம் 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 3 வெற்றி, 1 டிரா, 1 தோல்வி கண்டுள்ளது. இந்தியா அணி லீக் ஆட்டங்களில் நியூசிலாந்து, அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது, அர்ஜென்டினாவுடனான ஆட்டம் டிரா ஆன நிலையில் பெல்ஜியத்திடம் தோல்வியடைந்தது. தற்போது கால்யிறுதிக்கு முன்னேறி உள்ள இந்திய அணி, இன்று கிரேட் பிரிட்டனை எதிர்கொள்கிறது. இந்தியா vs கிரேட் பிரிட்டன் இடையிலான ஆண்கள் காலிறுதி ஆட்டம் பிற்பகல் 1:30 மணி நடைபெறுகிறது.
தடகளம்:இந்தியாவிற்கான தடகளத்தில், பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் சுற்று 1ல் பருல் சவுத்ரி தனது முதலாவது முயற்சியில் இன்று விளையாடுகிறார். அதே நேரத்தில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் கலந்து கொள்கிறார். இருவரும் தடகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.