சென்னை: ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஜாக்டோ ஜியோ சார்பில், சென்னை நந்தனத்தில் உள்ள கருவூல கணக்குத்துறை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் இன்று (பிப்ரவரி 14) நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, சென்னை மாவட்ட ஜாக்டோ ஜியோவின் ஒருங்கிணைப்பாளர் முத்துச்செல்வன் கூறியதாவது, “ஆட்சி அமைந்தவுடன் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்தனர். ஆனால், நான்கு ஆண்டுகளாகியும் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்படும் என்று கூறிவிட்டு, தற்போது குழுவை அமைத்துள்ளது ஏமாற்றுவதாக உள்ளது.
ஜாக்டோ ஜியோ சார்பில் வருகிற 25-ஆம் தேதி ஒரு நாள் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப்பேசி கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.
கோரிக்கைகள்:
கடந்த ஏப்ரல் 2024 பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத்திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள், உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும். ஆசிரியர்களின் நலனுக்கு எதிரான அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும்.
பணி உயர்வு:
முதுகலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு (CAS) ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் MRB செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், கணிணி உதவியாளர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.
காலி பணிடிடங்கள் நிரப்ப வேண்டும்:
மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள் ஆசிரியர்கள். அதேபோல், 171 தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அரசின் பல்வேறு நுறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை, காலமுறை ஊதியத்தில் நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசும் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும். 2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நான் முதல் பணிவரண் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
சாலைப்பணியாளர்களில் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடைசெய்திட வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுதியுள்ளார்.