சென்னை: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இதில் 133 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் 320 போட்டிகளில் 32 பிரிவுகளில் விளையாட உள்ளனர்.
இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 14 வயதான தினிதி தேசிங்கு தேர்வு பெற்றுள்ளார். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் பெங்களூரில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த ஆண்டு நடைபெறக்கூடிய பாரிஸ் ஒலிப்பிக்கில் இந்தியா சார்பாக மொத்தம் 111 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ள நிலையில், வயது குறைந்த வீராங்கணையாக தினிதி பங்கேற்க உள்ளார்.
வேர்ல்ட் அக்வாட்டிக் புள்ளிப்பட்டியலில் 749 புள்ளிகளுடன் இந்தியாவின் முதல்நிலை வீராங்கனை என்ற அடிப்படையில் யுனிவர்சலிட்டி முறையில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இவர் இந்த ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஃபிரிஸ்டைல் பிரிவில் பங்கேற்க உள்ளார்.
இவர் நீச்சல் பயிற்சியை கடந்த 2018ஆம் ஆண்டு மேற்கொள்ள தொடங்கியுள்ளார். உலக நீர்வாழ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் அளவில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை கைப்பற்றியுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்றார். கோவாவில் நடைபெற்ற 37வது தேசிய விளையாட்டு போட்டியில் 7 தங்கப்பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும், இந்த ஆண்டு தோஹாவில் நடைபெற்ற உலக நீர்வாழ் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பங்கேற்றார்.