இலங்கை: இலங்கை அதிபராக பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்கேயின் பதவி காலம் வரும் நவம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 16ஆம் தேதிக்குள் நடத்தப்பட உள்ளது. அதில், மீண்டும் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுரா குமார திசாநாயக்க ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
இந்நிலையில், யாழ்ப்பாண தந்தை செல்வா கலையரங்கில், இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மேலும், தமிழ்த் தேசியக் கட்சிகள் - தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் 9 அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவை,
1. தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை இவ்வுடன்படிக்கையில் சம தரப்பினர் என்னும் வகையில், இரு தரப்பினரின் இணைவில், உருவாக்கப்படும் இக்கட்டமைப்பு "தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" என அழைக்கப்படும்.
2. இவ்வுடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்படும் “தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு” எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை. சிறிலங்காவின் அரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தேர்தலாக கையாளும் வகையில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதெனத் தீர்மானித்துள்ளது.
3. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது தமிழ்ப் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தல், தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்தல், நிதி தொடர்பான விடயங்கள். பரப்புரைகளை முன்னெடுத்தல் போன்ற, அனைத்து அவசியமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கும் நிர்வகிப்பதற்குமான, துணைக் குழுக்களை தேவைக்கேற்ப உருவாக்கும் அதிகாரங்களை கொண்டிருக்கும்.
4. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பால் பொதுவேட்பாளரை நடவடிக்கைக்காக உருவாக்கப்படும் குறித்த துணைக் குழுக்கள் மற்றும் ஏனைய துணைக் கட்டமைப்புக்கள் அனைத்திலும் தமிழ்த் தேசியக் கட்சிகள். தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை சமதரப்பாகப் பங்குபற்றும்.
5. தமிழ்ப் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுபவரும் அவருக்கான தேர்தல் சின்னமும் தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான ஒரு குறியீடாக மட்டுமே கருதப்படுதல் வேண்டும்.