சென்னை: பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட மேய்க்கால் (மேய்ச்சல்) புறம்போக்கு நிலம், விவசாயத்திற்கு தனியாரால் பயன்படுத்தப்படுகிறது என்று தொடரப்பட்ட வழக்கில், இனி ஒரு அடி கூட விவசாய நிலமாக மாற்றக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், சோலூர் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் நிலங்களை தனியார் விவசாய நிலங்களாக மாற்றி, ஆக்கிரமித்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (பிப்ரவரி 12) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், பழங்குடியினரின் உரிமைகளை தடுக்கவில்லை. அவர்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர். பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 390 ஏக்கர் நிலங்களில், பழங்குடியினர் அல்லாதவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர் என்றனர்.
இதையும் படிங்க: 'வெயிட் அண்ட் சீ': பாலியல் குற்றப்பட்டியலில் 238 ஆசிரியர்கள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்! |
மொத்த நிலத்தில், 70 விழுக்காடு நிலம் வரை பழங்குடியினர் அல்லாதவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறிய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், தற்போது விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் 390 ஏக்கர் நிலப்பரப்பு, இன்னும் விரிவடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இனி பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு அடி நிலம் கூட விவசாய நிலங்களாக மாற்றப்படவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதில், 390 ஏக்கர் பரப்பளவை அளவீடு செய்து எல்லையை வரையறுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.