தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இப்போ டாடா இல்லையே'.. இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான ஆலை.. மனமுருகிய பிரதமர் மோடி!

சி-295 விமானங்களைத் தயாரிப்பதற்கான இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான ஆலையை பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்
பிரதமர் நரேந்திர மோடி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (credit - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

வதோதரா:குஜராத் மாநிலம் வதோதராவில் சி-295 விமானங்களைத் தயாரிப்பதற்கான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

சி-295 எனப்படும் ராணுவ பயன்பாடு மற்றும் விஐபி-களின் பாதுகாப்புக்கான விமானங்களை ஸ்பெயினின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் உள்நாட்டில் தயாரிக்கவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 56 விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளன. அவற்றில் 16 விமானங்கள் ஸ்பெயினின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக பெறப்படவுள்ளது. மீதமுள்ள 40 விமானங்கள் வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் ஆலையில் தயாரிக்கப்படவுள்ளது. ஏர்பஸ் உடனான இந்த ஒப்பந்தம் 2012-ல் அப்போதைய டாடா சன்ஸ் தலைவரான, மறைந்த ரத்தன் டாடா இருந்தபோது போடப்பட்டது.

இந்நிலையில், சி-295 விமானங்களை தயாரிப்பதற்கான புதிய வளாகத்தை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

தொலைநோக்கு பார்வையின் மற்றொரு வெற்றி:அப்போது பேசிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ''இன்று நாங்கள் ஒரு அதிநவீன தொழில்துறை வசதியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பதோடு, இரு பிரபல நிறுவனங்களுக்கிடையில், ஒரு அசாதாரண திட்டம் எவ்வாறு யதார்த்தமாகிறது என்பதையும் இன்று நாம் காண்கிறோம். பிரதமர் மோடி, இது உங்கள் தொலைநோக்கு பார்வையின் மற்றொரு வெற்றி ஆகும். உங்கள் பார்வை இந்தியாவை ஒரு தொழில்துறை சக்தியாகவும் முதலீடு மற்றும் வணிகத்திற்கான காந்தமாகவும் மாற்ற வேண்டும். ஏர்பஸ் மற்றும் டாடா இடையேயான இந்த கூட்டுறவு இந்திய விண்வெளித் துறையின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மற்றும் பிற ஐரோப்பிய நிறுவனங்களின் வருகைக்கு புதிய கதவுகளைத் திறக்கும்" என்றார்.

தொடர்ந்து பேசிய பெட்ரோ சான்செஸ், 2026 ஆம் ஆண்டில், இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் சி -295 வதோதராவில் உள்ள இந்த ஆலை மூலம் தயாரிக்கப்படும். இது இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை நவீனமயமாக்குவதில் பங்களிப்பதோடு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உந்துதலாக இருக்கும். இந்தியாவின் முன்னணி உற்பத்தி மையமாக திகழும் குஜராத் மாநிலத்தில், ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் இங்கு உருவாக்கப்படும். மேலும், புதிய தலைமுறையினரில் தகுதி வாய்ந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படும்'' என்றார்.

புதிய பாதையில் புதிய இலக்கு:பிரதமர் மோடி பேசுகையில், இது என்னுடைய நண்பர் பெட்ரோ சான்செஸின் முதல் இந்திய வருகை ஆகும். இன்று முதல் இந்தியா மற்றும் ஸ்பெயினின் கூட்டாண்மை புதிய திசையை நோக்கி நகரும். இந்த தொழிற்சாலை இந்தியா - ஸ்பெயின் உறவுகளை வலுப்படுத்தும். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியையும், மாற்றத்தையும் அனைவரும் கண்டுள்ளனர்.

இந்தியாவை விமான மையமாக மாற்ற நாங்கள் ஏற்கனவே பணியாற்றி வருகிறோம். இந்த அமைப்பு எதிர்காலத்தில் ''மேட் இன் இந்தியா'' சிவில் விமானங்களுக்கு வழி வகுக்கும். பல்வேறு இந்திய விமான நிறுவனங்கள் 1,200 புதிய விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளன. இந்தியா மற்றும் உலகின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிவில் விமானங்களின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் இந்த தொழிற்சாலை முக்கியப் பங்காற்றப் போகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு உறுதியான நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்திருந்தால், இன்று இந்த நிலையை எட்டுவது சாத்தியமில்லை. இந்தியாவில் இவ்வளவு பெரிய பாதுகாப்பு தண்டவாள தயாரிப்பு இருக்கும் என்று அப்போது யாரும் நினைத்துக்கூட பார்த்து இருக்க மாட்டார்கள். ஆனால், நாங்கள் அதனை நடத்தி காட்ட முடிவு செய்தோம். எப்போதும், புதிய பாதையில், நமக்கென ஒரு புதிய இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அதற்கான விளைவை இன்று நமது கண் முன்பு காண்கிறோம் என்றார்.

முன்னதாக, மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, '' சமீபத்தில் நாம் நாட்டின் மகத்தான மகன் ரத்தன் டாடாவை இழந்தோம். அவர் இன்று நம்முடன் இருந்திருந்தால், அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார். அவரது ஆன்மா எங்கிருந்தாலும், மகிழ்ச்சியாக இருக்கும்'' என குறிப்பிட்டார்.

வரலாற்று தருணம்:இந்த நிகழ்வில் பேசிய டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், இந்த திட்டம் 2012-ல் அப்போதைய டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடாவால் உருவாக்கப்பட்டது என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். ரத்தன் டாடா ஏர்பஸ்ஸுடனான உறவை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பிற்கு அடிக்கல் நாட்டினார். இது டாடா குழுமத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் ஒரு வரலாற்று தருணமாகும்.

இந்த ஆலையில் தயாரிக்கப்படும் முதல் விமானத்தை நாங்கள் வழங்குவோம் என்று எங்கள் பிரதமருக்கு உறுதியளிக்கிறோம். சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து எங்களது முதல் தயாரிப்பை பிரதமர் வந்து பெற்றுக்கொள்ளலாம்'' என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details