புதுடெல்லி: 2025-26ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். முதல் அம்சமாக வேளாண்மை குறித்த திட்டங்கள் அறிவித்து வருகிறார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டாவது முறையாக மத்திய நிதி நிலை அறிக்கையை மக்களவையை இன்று தாக்கல் செய்தார். முன்னதாக அவர் நிதி அமைச்சகத்தில் இருந்து பட்ஜெட் உரை அடங்கிய கோப்பை எடுத்துச் சென்றார். மத்திய பட்ஜெட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசினார். அப்போது நிர்மலா சீதாராமன் பேசுகையில், "இந்தியாவின் வேளாண்மை வளர்ச்சியை முன்னெடுக்க பிரதமர் தன் தான்ய கிரிஷி யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
வேளாண்மையில் பின்தங்கி இருக்கும் 100 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அவற்றை வேளாண் வளர்ச்சி பெற்ற மாவட்டங்களாக மாற்றுவதே இதன் நோக்கம். மாநிலங்கள் ஒத்துழைப்புடன் நாடு முழுவதும் உள்ள 100 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து இந்த திட்டம் மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டத்தின் கீழ்
1.வேளாண் உற்பத்தி அதிகரிப்பு,
2. பயிர் பன்முகத்தன்மையை மேற்கொள்ளுதல்
3 அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பத்தை முன்னெடுத்தல்
4. பாசன வசதிகளை அதிகரித்தல்.
5. நீண்டகால, குறுகிய கால கடன்கள் அளித்தல்
ஆகிய ஐந்து முக்கிய அம்சங்கள் தேர்வு செய்யப்படும் 100 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும். இதன் மூலம் 100 மாவட்டங்களில் உள்ள 1.7 கோடி விவசாயிகள் பலன் பெறுவார்கள்,"என்றார்.