Published : Aug 9, 2024, 5:16 PM IST
உலக பழங்குடியினர் தினம்..தப்பு அடித்து, தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு! - World Indigenous Peoples Day
திருவண்ணாமலை: உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி தப்பு அடித்து, தங்கு தக்கடி நடனமாடி, தலையில் தேங்காய் உடைத்து விமரிசையாக கொண்டாடினர்.
பழங்குடியின மக்களின் மொழி, பண்பாடு, வாழ்வியல், வாழ்வாதார உரிமைகள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் பழங்குடியின சமூகங்களை கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9ஆம் தேதி உலக பழங்குடிகள் தினமாகக் கொண்டாடி வருகிறது.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, குருமன்ஸ் மடத்து நிர்வாகம் மற்றும் குருமன்ஸ் பழங்குடியின மக்கள் இணைந்து உலக பழங்குடியினர் தினத்தை கொண்டாடினர்.
இதில், குருமன்ஸ் பழங்குடியின மக்கள், அவர்களது குலதெய்வத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கற்பூரம் ஏற்றி பாரம்பரிய முறைப்படி தப்பு அடித்து, தங்கு தக்கடி நடனமாடி, பாரப்பரிய பாடல்களை பாடியப்படி தலையில் தேங்காய் உடைத்து கொண்டாடினர்.