தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 12:55 PM IST

ETV Bharat / state

நெல்லை வெள்ளம்: "இனி கவலை வேண்டாம்"- புது தொழில்நுட்பத்தை நெல்லை மாநகராட்சி அறிமுகம்! - Flood Warning System

Flood Warning System: தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே கண்டறிந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் 10 இடங்களில் அதிநவீன வெள்ள கண்காணிப்பு கருவிகளை திருநெல்வேலி மாநகராட்சி அமைத்து வருகிறது.

வெள்ள கண்காணிப்பு கருவி
வெள்ள கண்காணிப்பு கருவி (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி:தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு, வேகம் உள்ளிட்டவைகளை கணித்து உடனுக்குடன் மாவட்ட நிர்வாகங்களுக்கு தகவல் அனுப்பும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வெள்ள கண்காணிப்பு கருவிகள் பொருத்தும் பணியினை திருநெல்வேலி மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை பயணித்து கடலில் கலக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை காலங்களில் தாமிரபரணி நதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் பல்வேறு பாதிப்புகளும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளத்தை கண்காணிக்க புது தொழில்நுட்பம் (ETV Bharat Tamil Nadu)

கடந்தாண்டு வெள்ளம்: கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதி கன மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் 2 லட்சம் கன அடி நீர் வரை வெளியேறியதால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கரையோர பகுதிகள் முழுவதும் கடும் பாதிப்புக்கு உள்ளானது. திருநெல்வேலியில் மட்டும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரது வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உடமைகளை இழந்து தவித்தனர். அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

அங்கு பல கிராமங்களே வெள்ளத்தில் மூழ்கின. எனவே வரும் காலங்களில் முன்னெச்சரிக்கையாக வெள்ளத்தடுப்பு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென மக்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் ரூபாய் 88 லட்சம் மதிப்பீட்டில் தனியார் அமைப்பு உதவியுடன் தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ள ஓட்டத்தை கண்டறிந்து பாதிப்புகளை தடுக்கும் வகையில் பாதிப்பை தடுத்து தகவல் பெறும் வகையிலான வெள்ள கண்காணிப்பு கருவிகள் பொருத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

வெள்ள பாதிப்புகளை கண்டறியும் கண்காணிப்பு கருவி:திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி மற்றும் மணிமுத்தாறு ஆகியவை இணையும் இடமான ஆலடியூரில் தொடங்கி தாமிரபரணி நதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்லும் இடமான முறப்பநாடு வரை 10 இடங்களில் வெள்ள பாதிப்புகளை கண்டறியும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகளின் மூலம் தாமிரபரணி ஆற்றில் வரும் நீரின் அளவு, வெள்ளத்தின் போது நீரோட்டம், தண்ணீரின் வேகம் உள்ளிட்டவைகளை கணிக்க முடியும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதி செல்லும் முக்கிய பாலங்களில் 10 இடங்களில் இந்த கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகளில் 360 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கும் அதிநவீன சென்சார் கேமரா மற்றும் சென்சார் போர்டுகள் இடம்பெற்றுள்ளது. இந்த கருவிகள் இயங்குவதற்கு தேவையான மின்சாரம் பெறுவதற்கு சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது.

உடனுக்குடன் நடவடிக்கை:வெள்ள காலங்களில் பெரும் சேதத்தை தவிர்க்கும் வகையில் இந்த கருவிகள் மூலம் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெள்ள கண்காணிப்பு கருவிகளில் இருந்து பெறப்படக்கூடிய தகவல்கள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மற்றும் மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

அங்கிருந்து தண்ணீரின் வேகம் தண்ணீருடைய அளவு மற்றும் தண்ணீர் செல்லும் பாதைகளை கணக்கிட்டு வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் வெள்ள காலங்களில் பாலங்களில் நின்று பொதுமக்கள் தண்ணீரை வேடிக்கை பார்த்தாலும் சென்சார் கருவிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும் வகையில் இந்த கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தானியங்கி மழைமானி: ஒரு சில நாட்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெள்ள கண்காணிப்பு கருவிகள் செயல்பாட்டுக்கு வரும் என அதனை அமைத்து வரும் தனியார் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இது தவிர திருநெல்வேலி மாநகர பகுதிகளில் பெய்யும் மழையின் அளவுகளை தரவுகளாக குறிக்கும் வகையில் புதிதாக நான்கு அதிநவீன மற்றும் தானியங்கி மழைமானிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

காற்றின் வேகத்தையும் கண்காணிக்கலாம்:மாநகரின் நான்கு திசைகளான பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு, திருமால் நகர் மற்றும் டார்லிங் நகர் பகுதிகளில் புதிய மழைமானிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேட்டை பகுதியில் தானியங்கி காலநிலை கண்காணிப்பு மையமும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தானியங்கி மையத்தின் மூலம் மாநகரப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு, காற்றின் வேகம், சுற்றுச்சூழல் மாசு, வெயிலின் தாக்கம் போன்றவைகளை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் சட்டவிரோத மணல் கொள்ளை? கனிமவளத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! - illegal sand mining case

ABOUT THE AUTHOR

...view details