தமிழ்நாடு

tamil nadu

கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சம்பவம்.. வயநாடு கொடூரத்தை விளக்கிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! - Wayanad Flood Relief Work

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 31, 2024, 1:39 PM IST

Wayanad landslide: வயநாட்டில் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சம்பவம் நடைபெற்றுள்ளதாக அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள கோவையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் வேதனையுடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹக்கீம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதி
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹக்கீம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதி (Credits - ETV Bharat Tamil Nadu)

வயநாடு:கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில், அப்பகுதியில் உள்ள பல வீடுகள், சாலைகள், பாலங்கள் என அனைத்தும் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், நேற்றைய தினம் (ஜூலை 30) அதிகாலையில், வயநாடு மேப்பாடி பகுதியில் உள்ள சூரல் மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேப்பாடு முண்டக்கை மற்றும் சூரல்மலை என்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் பலியாகியுள்ளனர். ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்ட பலர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மீட்புப்பணிக்காக அப்பகுதியில் தற்காலிக பாலம் ஒன்றை அமைத்து, சுமார் 150 ராணுவ வீரர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த கோரச்சம்பவத்தில், இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டும் அல்லாது, இந்த பேரிடரில் தோண்டத் தோண்ட சடலங்கள் கிடைப்பதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது வரை உயிரிழந்தவர்களில் 54 பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாகவும், அதில் 52 பேரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராணுவத்தினர், பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரவு பகலாக தொடர்ந்து வரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, இரண்டாம் நாளான இன்றும் (ஜூலை 31) மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மேப்பாடி பகுதியிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ்கள், ராணுவ மருத்துவ வாகனம், ஏராளமான தன்னார்வலர்கள், கிரேன், உட்பட அனைத்து வாகனங்களும் அணிவகுத்துச் சென்று கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வயநாடு பகுதிக்குச் சென்றுள்ளனர். அவர்கள் அங்குள்ள தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

அவர்கள் நிலச்சரிவில் சிக்கி வீடுகள் சிதைந்துள்ள பகுதிக்குச் சென்று அந்த வீடுகளில் யாராவது உள்ளார்களா என தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அங்கு சென்றுள்ள கோவை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹக்கீம் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வெளியிட்ட வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

அதில் அவர், "தற்போது நாங்கள் இருக்கும் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சம்பவம் நடைபெற்றுள்ளது. கார்கள், வீடுகள் என அனைத்தும் புதைந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்வதால் மீட்புப் பணியில் தொய்வு இருந்தாலும் மழையை பொருட்படுத்தாமல் மீட்புப் பணியில் அனைத்து துறையினரும் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது வயநாட்டிலிருந்து தமிழக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் வெளியாகியுள்ள உருக்கமான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:மீட்புப் பணிக்காக வயநாட்டில் முகாமிட்ட தமிழக குழுவினர்.. கோவையில் இருந்து செல்லும் நிவாரணப் பொருட்கள்!

ABOUT THE AUTHOR

...view details