தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

உலக பெருமூளை வாதம் தினம்; உலகளவில் 18 மில்லியன் பேர் பாதிப்பு! - World Cerebral Palsy Day 2024

பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சம உரிமைகள், வாய்ப்புகள் உருவாக்கிடும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 6ஆம் தேதி உலக பெருமூளை வாதம் தினம் (World Cerebral Palsy Day) கடைபிடிக்கப்படுகிறது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

கோப்பு படம்
கோப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 6 ஆம் தேதி உலக பெருமூளை வாதம் தினம் (World Cerebral Palsy Day) கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று உலக பெருமூளை வாதம் தினம் அனுசரிக்கப்படுகிறது. பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனுபவிக்கும் சவால்களை கவனத்தில் கொண்டு, சமூகத்தில் அவர்களுக்கும் சம உரிமைகள், வாய்ப்புகள் உருவாக்கிடும் நோக்கில் கடந்த 2012இல் உலக பெருமூளை வாதம் தினம் நிறுவப்பட்டது.

பெருமூளை வாதம்: பெருமூளை வாதம் (Cerebral Palsy) என்பது உடல் இயக்கம், தசை அசைவை பாதிக்கும் கோளாறாகும். குழந்தை பிறப்பதற்கு முன் மூளையில் ஏற்படும் காயத்தால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. புதிதாக பிறக்கும் 345 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவில் சுமார் 1 மில்லியன் பேரும், உலகளவில் 18 மில்லியன் பேரும் பெருமூளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருமூளை வாதம் நோயின் அறிகுறிகள்:

பெருமூளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தசை அதிக விறைப்பாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இருக்கும்.

உட்காருவது, நடப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை செய்வதற்கு தாமதமாகலாம். தலையை தாங்கும் திறன் இருக்காது.

நடுக்கம் இருக்கும்.

பார்வை குறைபாடுகள், கேட்பதில் பிரச்சினை ஆகியவை இருக்கலாம்.

இதையும் படிங்க:அல்சைமர் நோய்க்கு இயற்கை முறையில் சிகிச்சை - ஆய்வு கூறுவது என்ன? - Remedies for Alzheimer Disease

பெருமூளை வாதத்தின் வகைகள்:பெருமூளை வாதம் நான்கு வகைப்படும்.

ஸ்பாஸ்டிக் பெருமூளை வாதம் (Spastic Cerebral Palsy): இவ்வகையான பாதிப்பில் தசைப்பிடிப்பு ஏற்படும்.

டிஸ்கினெடிக் பெருமூளை வாதம் (Dyskinetic Cerebral palsy) - இவ்வகையான பாதிப்பில் கட்டுப்படுத்த முடியாத கை, கால் அசைவுகள் இருக்கும்.

ஏடாக்ஸிக் பெருமூளை வாதம் (Ataxic Cerebral Palsy) - உடல் இயக்கங்களின் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பில் பாதிப்பு ஏற்படும்.

மிக்ஸட் பெருமூளை வாதம் (Mixed Cerebral Palsy)- இவ்வகையான பாதிப்பில் மேற்கூறிய அனைத்து பாதிப்புகளும் கலந்திருக்கும்.

பெருமூளை வாதம் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:

குறைப்பிரசவம் மற்றும் குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது ஆகியவை பெருமூளை வாதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகும்.

பக்கவாதம், மூளையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவற்றாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

20 வயதுக்கு முன்னும், 34 வயதுக்கு பின்னும் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு பெருமூளை வாதம் பாதிப்பு கொண்ட குழந்தை பிறக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

உடல்நலக்குறைவுள்ள தாய்மார்களுக்கு பெருமூளை வாதம் பாதிப்பு கொண்ட குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம்.

மரபணு மாற்றங்களும் பெருமூளை வாதம் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

பெண்களை விட ஆண்களுக்கு பெருமூளை வாதம் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details