சென்னை:தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்திய போது தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்தார். சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட போதே தனக்கு உடல் நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், இருப்பினும், அந்த நேரத்தில் அதைப் பற்றிய தெளிவான புரிதல் தனக்கு இல்லை என்றும் கூறினார்.
இஸ்ரோ தலைவருக்கு வயிற்றுப் புற்றுநோய்: புற்றுநோய் கண்டறியப்பட்டதை அடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் அடுத்து 5 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சையும் எடுத்துக் கொண்டதாகவும் கூறினார். இது குறித்து மேலும் பேசிய அவர், புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது தனது குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், ஆனால் தப்போது, புற்றுநோயையும் அதன் சிகிச்சையையும் ஒரு தீர்வாக உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
புற்றுநோய்க்கு எதிரான தான் போராடிய விதம் குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், 4 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்ட பின் 5வது நாள் மீண்டும் பணியில் இணைந்ததாக கூறினார். தற்போது புற்றுநோயில் இருந்து முழுமையாக குணமடைந்ததாகவும், தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
வயிற்றுப் புற்றுநோய்:இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை தாக்கிய வயிற்று புற்றுநோய் குறித்து நிபுணர்கள் கூறுவதை இத்தொகுப்பில் பார்க்கலாம். இது குறித்து குருகிராமில் உள்ள சிகே பிர்லா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் இயக்குநர் மருத்துவர் வினய் சாமுவேல் கெய்க்வாட் கூறுகையில், “வயிற்றுப் புற்றுநோய் பெண்களை விட ஆண்களையே அதிகமாக தாக்கும். ஆண்களிடையே அதிகமாகக் காணப்படும் 5வது புற்றுநோய்.
அறிகுறிகள்:வயிற்றுப் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் என்று பார்த்தோமானால், தொடர்ந்து வயிற்று வலி, வயிறு பகுதியில் அசௌகரியம், அதிகமான எடை இழப்பு, பசியின்மை, உணவு விழுங்குவதில் சிரமம், குமட்டல், வாந்தி, மலத்தில் இரத்தம் போன்றவை இருக்கும். இந்த அறிகுறிகள் தெளிவற்றதாக இருக்கலாம். சில சமயங்களில் இரத்த சோகை, வயிற்று வலி, எடையிழப்பு போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.