தமிழ்நாடு

tamil nadu

“ஏன் தமிழில் சொற்களுக்கா பஞ்சம்?" - கவிஞர் வைரமுத்து கேள்வி! - Vairamuthu Talk About Tamil Title

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 3:17 PM IST

Kavingar Vairamuthu: “தற்போது வரும் படங்களின் பெயர்களை பார்க்கையில் துக்கப்படுகிறேன், வெட்கப்படுகிறேன். தயவுசெய்து படங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள்” என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் புதுமுகங்கள் முதன்மை கதாபாத்திரத்திலும், அவர்களோடு வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள 'பனை' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில், கவிஞர் வைரமுத்து மற்றும் வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு, இப்படத்தில் பாடல் வரிகள் எழுதியுள்ள வைரமுத்து இசைத் தட்டை வெளியிட, அதனை வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய வைரமுத்து, “இந்த படத்தின் தலைப்பு 'பனை' என்பது மண்ணின் பெயர், மக்களின் பெயர், கலாச்சார குறியீடு என நினைக்கிறேன். தற்போது வரும் படங்களின் பெயர்களைப் பார்க்கையில் துக்கப்படுகிறேன், வெட்கப்படுகிறேன். ஏன் தமிழில் சொற்களுக்கா பஞ்சம்?

கருத்துகள் மற்றும் படத்தின் காட்சியை விரிவுபடுத்தும் வகையில்தான் படத்தின் பெயர்கள் இருக்க வேண்டும். முந்தைய காலத்தில் படத்தின் கதையை பட தலைப்புகள் சொல்லிவிடும். தயவுசெய்து படங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள். இதனை வேண்டுகோளாக வைக்கிறேன். பாமரன் தமிழை விரும்புகிறான். ஆனால், நீங்கள் பாமரனிடம் இருந்து தமிழை தள்ளி வைக்கிறீர்கள்" எனப் பேசினார்.

மேலும், தொடர்ச்சியாக பேசிய அவர், "இந்தியாவில் 11 கோடி பனை மரங்கள் உள்ளது. ஆனால், அதில் 6 கோடி பனை மரங்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. தமிழ்நாட்டு மரம் இந்த பனை மரம். ஒவ்வொரு அரசனுக்கும் ஒரு கொடி உள்ளது போல, சேரனுக்கு பனை பூ மாலையை அணிவித்த வரலாறு இங்கு உண்டு. தமிழ்நாட்டின் மரமாக பனை மரம் உள்ளது. அது சொல்லும், பனை மரத்தின் முக்கியத்துவத்தை" என்று எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் பேரரசு பேசுகையில், "கோடிக்கணக்கில் ரசிகர்களை வைத்துள்ள முன்னணி நடிகர்களுக்கு அதிக அறிமுக பாடல்களை எழுதியவர் வைரமுத்து. அவர் எழுதிய 'வந்தேன்டா பால்காரன்' பாடல்தான், நான் இயக்கிய 'திருப்பாச்சி' படத்தில் 'நீ எந்த ஊரு நான் எந்த ஊரு' பாடலை அவரை வைத்து எழுத காரணம்.

ஒரு ட்யூனுக்கு பாடலாசிரியராக பணியாற்றுவது என்பது வேறு, கவிதைகளை நிரப்புவது என்பது வேறு. அந்த வகையில், ஒரு ட்யூனுக்கு கவிதைகளை நிரப்புவது கவிப்பேரரசுதான். வைரமுத்து எழுதுகிற ஒவ்வொரு பாடலும் வரிகள் கிடையாது கவிதைகள்" என்று பேசினார்.

இதையும் படிங்க:41 வயதில் நோயில் சிக்கிய ஃபகத் ஃபாசில்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details