தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 3:21 PM IST

ETV Bharat / entertainment

மஞ்சும்மல் பாய்ஸ் விவகாரம்.. எழுத்தாளர் ஜெயமோகன் பதிவிற்கு இயக்குநர் லெனின் பாரதி பதிலடி!

Manjummel Boys Issue: மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ள கருத்துகள், இனவெறுப்பு மற்றும் வன்மம் புளித்து பொங்கும் வக்கிர வார்த்தைகள் என இயக்குநர் லெனின் பாரதி தெரிவித்துள்ளார்.

மஞ்சும்மல் பாய்ஸ் விவகாரம்
மஞ்சும்மல் பாய்ஸ் விவகாரம்

சென்னை:குணா குகையில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான படம் ’மஞ்சும்மல் பாய்ஸ்'. இப்படம் கேரளாவை விட தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இத்திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படத்தை கமல்ஹாசன், தனுஷ், விக்ரம் உள்ளிட்டோர் என பலரும் பாராட்டினர். இந்த நிலையில், இந்த படத்திற்கு எந்த அளவிற்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்ததோ, அதே போல் எதிர்மறையான விமர்சனங்களுக்கு எழத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் இப்படத்தைக் காட்டமாக விமர்சித்திருந்தார். இது குறித்து அவர் கூறியதாவது,"மஞ்சும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் உள்ளது.

சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல அடர் காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடி குடி குடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது. வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது.

இந்த படத்தில் தமிழக போலீஸ் அவர்களை நடத்தும் விதமும் உண்மையானது. அடி தவிர எதுவுமே இவர்களுக்குப் புரிவதில்லை. கேரளத்தில் திருமண நிகழ்வுகளுக்குச் செல்வதே பெருந்துன்பமாக ஆகிவிட்டிருக்கிறது. மலையாளிகளே இருவகை. அயல்நாட்டில் ரத்தம் சுண்ட உழைப்பவர்கள். அவர்களைச் சுரண்டி உள்நாட்டில் குடிப்பவர்கள்.

இந்தக் குடிகாரக் கும்பல் எந்தக் கல்யாணத்திலும் வந்து வெறியாட்டம் இடுகிறார்கள். மணப்பந்தலிலேயே வாந்தி எடுப்பவர்கள் ஏராளமானவர்கள். மணப்பந்தலில் மணமகனே வாந்தி எடுப்பதைக் கண்டிருக்கிறேன் அவர்கள் குடிகார பொறுக்கிகள்" எனக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்க் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ஜெயமோகனின் கருத்து மேற்குத் தொடர்ச்சி மலை இயக்குநர் லெனின் பாரதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

அதில், ஜெயமோகன் உங்கள் ஒட்டுமொத்த மூளையும் புளித்த மாவு என்றால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருக்கிறது 'கேரளப் பொறுக்கிகள்', 'மலையாளக் குடிகாரப் பொறுக்கிகள்' என்று நீங்கள் கக்கியிருக்கும் இனவெறுப்பு மற்றும் வன்மம் புளித்துப் பொங்கும் வக்கிர வார்த்தைகள்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மாநிலங்களவைக்குச் செல்கிறார் கமல்ஹாசன் - மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை!

ABOUT THE AUTHOR

...view details