தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'மண்டைக்கு சூரு ஏறுதே'.. சூது கவ்வும் 2 பாடல் வெளியானது! - mandaikku sooru eruthey song

Mandaikku Sooru Eruthey Song Release: இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில், நடிகர்கள் மிர்ச்சி சிவா, ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள சூது கவ்வும் 2 படத்திலிருந்து 'மண்டைக்கு சூரு ஏறுதே' என்ற பாடல் வெளியாகி உள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 6:45 PM IST

Mandaikku Sooru Eruthey Song Release
Mandaikku Sooru Eruthey Song Release

சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில், கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூது கவ்வும். இப்படத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். புதுமையான திரைக்கதையுடன் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், தற்போது சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில், தங்கம் சினிமாஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் தயாரித்துள்ளனர். இதில் மிர்ச்சி சிவா, ராதாரவி, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்திலிருந்து 'மண்டைக்கு சூரு ஏறுதே' எனும் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசைக் கல்லூரியிலும், லண்டன் டிரினிட்டி கல்லூரியிலும் பயின்ற எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்தப் பாடலை மலேசியக் கலைஞர் கண்ணன் கணபதி, முன்னணி சிங்கப்பூர் கலைஞர் ஸ்டீபன் ஜக்கரியா மற்றும் நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

பாடலைப் பற்றி பேசிய இசையமைப்பாளர் எட்வின், "இந்தப் பாடல் திரைப்படத்தின் பின்னணியில் வரும் பாடல். இதில், இதுவரை திரையுலகில் பயன்படுத்தப்படாத 'சூரு' எனும் தமிழ் வார்த்தையை உபயோகித்துள்ளோம். சூரு என்றால், கிராமத்து வழக்கில் அதீத உற்சாகத்தில் இருப்பது என்று பொருள்.

மலேசியாவிலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பாடலுக்கு இது மிகவும் பொருத்தமாக இருந்ததால், இதை உபயோகப்படுத்தி உள்ளோம். பாடல் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. மலேசியாவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டுள்ள கண்ணன் கணபதி, சிங்கப்பூரில் சாதனை படைத்துள்ள ஸ்டீபன் ஜக்கரியா மற்றும் நடிகராக மட்டுமில்லாமல், இசையமைப்பாளராகவும் உள்ள பிரேம்ஜி அமரன் ஆகியோர் இப்பாடலுக்காக மிகச் சிறப்பான ஒத்துழைப்பு தந்துள்ளதற்கும், 'சூது கவ்வும் 2' திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கு தனக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கும் நன்றி" எனத் தெரிவித்தார்.

'சூது கவ்வும்' வெளியாகி 11 ஆண்டுகள் கழித்து, இரண்டாம் பாகமான 'சூது கவ்வும் 2' தயாராகி உள்ளது. 'சூது கவ்வும்' திரைப்படத்தின் முறையான இரண்டாம் பாகமாகவும், நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் கலந்த பரபரப்பு திரைப்படமாகவும் 'சூது கவ்வும் 2' இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி.. தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி! - Sivakarthikeyan

ABOUT THE AUTHOR

...view details