சென்னை: ’தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது 'வீர தீர சூரன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகவுள்ளது. அதற்கு பிறகே முதல் பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மார்ச் 27ஆம் தேதி ’வீர தீர சூரன்’ திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
’பண்ணையாரும் பத்மினியும்’, ’சேதுபதி’, ’சித்தா’ ஆகிய படங்களின் இயக்குநர் அருண் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். விக்ரமுடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு டீசம்பர் மாதம் ’வீர தீர சூரன்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
டீசருக்கு முன்பு படத்தின் மையமான போலீஸ் ஸ்டேசனை மையப்படுத்தியும் மளிகை கடையை மையப்படுத்தியும் இரண்டு முன்னோட்ட காணொலிகள் வெளியாகின. அவையோடு சேர்த்து டீசரும் இத்திரைப்படம் ஒரு பக்கவான ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்பதை உணர்த்துவதாக இருந்தது. விக்ரம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படத்தில் நடித்து நீண்ட காலமாகிவிட்டதால் ரசிகர்களிடையே இது எதிர்பார்ப்பைக் கூட்டியது.
படத்தைப் பற்றி இயக்குனர் அருண் குமார் கூறுகையில், “’வீர தீர சூரன்’ படத்திற்கு நிறைய முன்கதைகள் உள்ளன. ஒரு இரவில் நடக்கும் கதை தான் இப்படம். ’வீர தீர சூரன்’ படத்தின் ஜானர் வேண்டுமானால் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கலாம். ஆனால் அதுமட்டுமல்லாமல் இப்படம் வன்முறை, மன்னிப்பு, குற்றவுணர்ச்சி ஆகிய உணர்வுகளைக் குறித்தும் பேசுகிற படமாக இருக்கும் ” என தெரிவித்திருந்தார்.