தமிழ்நாடு

tamil nadu

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முடிந்தது? அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய அஜித்குமார்! - Ajithkumar in Chennai Airport

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 3:39 PM IST

Vidaamuyarchi update: அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார்.

சென்னை திரும்பினார் அஜித் குமார்
அஜித் குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் குட் பேட் அக்லி (Good bad ugly) அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

சென்னை திரும்பினார் அஜித் குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)

துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது.

கடந்த ஆண்டு அஜித் பிறந்தநாளான மே 1ஆம் தேதி 'விடாமுயற்சி' படத்திற்கான டைட்டில் வெளியானது. ஆனால், அதற்கு பிறகு பெரியதாக எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இதற்கிடையில் சில மாதங்கள் அஜர்பைஜானில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். அதன் பிறகு கடந்த ஜூன் 20-ம் தேதி அஜர்பைஜானில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாள்களிலேயே அஜித் வாகனத்தில் சாகசம் செய்யும் காட்சிகள் உள்ளிட்டவை வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவின.

இதனையடுத்து விடாமுயற்சி படத்தின் அப்டேட் ஜூன் 30 மாலை 7.03 மணிக்கு வெளியாகும் என்று அஜித்தின் மேலாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன்படி, விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதில் அஜர்பைஜான் சாலையில் கையில் பையுடன் ஸ்டைலாக அஜித் நடந்து வருகிறார்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், அஜர்பைஜானில் 2 சண்டைக் காட்சிகளையும் ஒரு பாடல் காட்சியையும் படமாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதே போல், இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அஜித் குமார் 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் கலந்து கொண்டு பின்பு இன்று சென்னை விமான நிலையம் வந்தார். அப்பொழுது விமான நிலையத்தில் அவருடைய ரசிகர்கள் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். ஆனால், நடிகர் அஜித் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்காமல் காரில் ஏறி புறப்பட்டுச் சென்று விட்டார்.

இதையும் படிங்க:"எவ்வளவு செலவு செய்து படங்கள் எடுத்தாலும் தியேட்டர்கள் கிடைப்பதில்லை" - இயக்குநர் அமீர் ஆதங்கம்!

ABOUT THE AUTHOR

...view details