தமிழ்நாடு

tamil nadu

மத்திய கிழக்கு போர் பதற்றம் எதிரொலி; பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி வரை இழப்பு - Rs10 lakh crore loss

சென்செக்ஸ் 30 நிறுவனங்களில், லார்சன் அண்ட் டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், கோடக் மஹிந்திரா வங்கி, அதானி போர்ட்ஸ், டைட்டன் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் மட்டுமே லாபகரமாக உருவெடுத்தது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

Published : 4 hours ago

மும்பை பங்குச் சந்தை (கோப்புப் படம்)
மும்பை பங்குச் சந்தை (கோப்புப் படம்) (Credits - ANI)

புதுடெல்லி: இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம், வெளிநாட்டி நிறுவனங்கள் முதலீடுகளை (எஃப்ஐஐ) திரும்பப்பெற்றது ஆகியவற்றால் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) 2 சதவீதத்துக்கும் அதிகமாக சரிவைக் கண்டது. இதன் காரணமாக பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளனர்.

பிஎஸ்இ குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,769.19 புள்ளிகள் (2.10 சதவீதம்) சரிந்து வர்த்தக நேர முடிவில் 82,497.10-ல் நிலை பெற்றது. இன்றைய வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 1,832.27 புள்ளிகள் (2.17 சதவீதம்) சரிந்து சென்செக்ஸ் 82,434.02 வரை சென்றது. இதனால், பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ஒரே நாளில் ரூ.9,78,778.57 கோடி குறைந்து ரூ.4,65,07,685.08 கோடியாக (அமெரிக்க டாலரில் 5.54 டிரில்லியன்) உள்ளது.

சென்செக்ஸ் சரிவு குறித்து மேத்தா ஈக்விட்டீஸ் லிமிடெட் மூத்த துணைத் தலைவர் (ஆராய்ச்சி பிரிவு) பிரசாந்த் டாப்சி கூறுகையில், "இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் நிதியை திரும்பப் பெறுவது மற்றும் சமீபத்திய தூண்டுதல் நடவடிக்கைகளுக்குப் பிறகு சீன சந்தைகளை நோக்கிய ஆர்வம் போன்றவை காரணமாக மும்பை பங்குச் சந்தை பெரும் சரிவை சந்தித்துள்ளது.

தவிர, மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களும் முதலீட்டாளர்களிடையே எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்திய சந்தைகள் அபரிமிதமான ஏற்றத்தை கண்ட நிலையில் தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளன." என்றார்.

இதையும் படிங்க:தீபாவளி பரிசு கொடுக்க காத்திருந்தாங்க போல! அக்டோபர் 2024 வெளியாகும் டாப் கிளாஸ் மொபைல்கள்!

சென்செக்ஸ் 30 நிறுவனங்களில், லார்சன் அண்ட் டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், கோடக் மஹிந்திரா வங்கி, அதானி போர்ட்ஸ், டைட்டன் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் மட்டுமே லாபகரமாக உருவெடுத்தது.

'பிரபுதாஸ் லில்லாதேர் கேபிடல்' நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் விக்ரம் கசத் கூறுகையில், "மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் பதற்றங்களானது, சந்தையில் ஏற்படுத்திய பெரிய தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தைகள் இன்று குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை கண்டுள்ளன. இந்த சரிவு சென்செக்ஸுக்கு இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய வீழ்ச்சியாகும். இதனால் சுமார் ரூ.10 லட்சம் கோடி மதிப்பில் சந்தை மூலதன இழப்பு ஏற்பட்டுள்ளது."

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ரூ.5,579.35 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றதாக பங்குசந்தை வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் (4.49 சதவீதம்), மூலதன பொருட்கள் (3.18 சதவீதம்), ஆட்டோமொபைல் (2.94 சதவீதம்), சேவை துறை (2.87 சதவீதம்), தொழில்துறை (2.75 சதவீதம்) மற்றும் எண்ணெய், எரிவாயு நிறுவன (2.52 சதவீதம்) ஆகிய துறைகள்சரிவை சந்தித்தன.

பிஎஸ்இ-ல் மொத்தம் 2,881 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,107 பங்குகள் வளர்ச்சி கண்டன. 88 பங்குகள் மாற்றம் காணாமல் இருந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 546 புள்ளிகள் சரிந்து 25,250-ல் நிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details