வேலூர்: காலாவதியான மருந்துகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் வனவிலங்குகளுக்கு ஆபத்து நேரிட்டுள்ளதாக புகார் எழுந்ததையடுத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த அரவட்லா செல்லும் மலைப்பாதையில் பாஸ்மார்பெண்டா, அரவட்லா, கொத்தூர், கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வனத்தை ஒட்டியுள்ள நிலத்தில் விவசாயம் செய்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். மேலும் காப்பு காட்டு வழியாக ஆந்திர மாநிலத்துக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மயில்கள், மான்கள், குரங்குகள், ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன.
காப்பு காடு பகுதிகளில் சாலை ஓரத்தில் காலாவதியான அரசு மருத்துவமனை மருந்துகள், மாத்திரைகள்,ஊசிகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை மர்மநபர்கள் மூட்டை மூட்டையாக கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் வனவிலங்களுக்கு பாதிப்பு நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காலாவதியான மருந்துகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகளை மூட்டைகளை கொட்டிச்சென்ற மர்ம நபர்களை பேரணாம்பட்டு வனத்துறையினர் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மருத்துவக் கழிவுகள் கொட்டிச் சென்ற நபர்கள் குறித்து பேரணாம்பட்டு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டிசம்பருக்குள் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.10,000-ஐ தொடும் - வெளியான அதிர்ச்சித் தகவல்!
அண்மையில், நெல்லை மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அபாயகரமான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. இது குறித்து சென்னையில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு முறையிட்டது. இது குறித்து விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் அமர்வு, கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கேரளாவிலிருந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை தமிழகத்திலிருந்து அகற்றுவதற்கு உரிய செலவுத் தொகையை கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் கேரளாவில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு என்னென்ன நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன? அங்குள்ள மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்து கேரள மாநில அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள அரசு அகற்ற நடவடிக்கை எடுத்தது.