மும்பை:மும்பை தாராவி குடிசைப்பகுதி மறுசீரமைப்பு திட்டத்துக்காக மகாராஷ்டிரா அரசு சார்பில் அதானி பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட டெண்டரை பம்பாய் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மும்பையில் 259 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள தாராவி மறுசீரமைப்பு திட்டத்துக்கான ரூ.5,069 கோடி டெண்டரை 2022ஆம் ஆண்டு அதானி குழுமத்துக்கு மகாராஷ்டிரா மாநில அரசு வழங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த செக்லிங்க் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "தாராவி குடிசைப்பகுதி மறுசீரமப்புக்காக கடந்த 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட டெண்டரை அதிக விலைப்புள்ளியாக ரூ.7200 கோடி குறிப்பிட்டு எடுத்தோம். ஆனால், எங்களுக்கு தரப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு 2022ஆம் ஆண்டு அதானி குழுமத்துக்கு ரூ.5,069 கோடி என குறைவான தொகைக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டெண்டரை ரத்து செய்து, எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்," என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு பம்பாய் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா, நீதிபதி அமித் போர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மகாராஷ்டிரா அரசு சார்பில் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில்,"டெண்டர் நடைமுறைகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டது. அதிக தொகைக்கு டெண்டர் கோரிய அதானி குழுமத்துக்கு சாதகமாக செயல்படவில்லை. 2018ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டது.கொரோனா சூழல்,ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற நிதி,பொருளாதார ரீதியான அம்சங்கள் காரணமாக மீண்டும் 2022ஆம் ஆண்டு புதிதாக டெண்டர் விடப்பட்டது.