சென்னை: பாஜக அரசிற்கு பலவீனமாக கருதப்பட்டு வந்த தென்னிந்தியாவில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத முடிவுகள் வரும் என்று மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேலே வந்துள்ளனர். 4 கோடி வீடுகள் ஏழைகளுக்காக கட்டப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் 10 கோடி உஜ்வாலா எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 11 கோடிக்கு அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 55 கோடி நபர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனடைந்துள்ளனர். 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்றபோது அங்குள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பிரதமர் மோடிக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்தனர். தென்னிந்தியாவில் 132 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் கர்நாடக மாநிலத்திலுள்ள 28 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது, ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து, சிஏஏ, முத்தலாக் சட்டம், கோயில்கள் சீரமைப்பு போன்ற பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகள், இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்பார் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.