தோல் கழிவுகளால் பாழாகும் பாலாறு - அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக விவசாயிகள் வேதனை!

By

Published : Aug 13, 2023, 11:35 AM IST

thumbnail

திருப்பத்தூர்: ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், இந்த கனமழையைப் பயன்படுத்தி வாணியம்பாடியைச் சுற்றியுள்ள சில தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவு நீரை பாலாற்றில் திறந்து விட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாறு தரைப்பாலத்தின் கீழ் பாலாறு நீர் துர்நாற்றத்துடன் நுரை பொங்க ஓடுகிறது.

மேலும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் நிலத்திலோ அல்லது கிணற்றிலோ தேக்கி வைக்ககூடாது என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஆட்சியரின் உத்தரவை மீறிய 6க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆட்சியரின் உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில், கனமழையைப் பயன்படுத்தி சில தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவு நீரை பாலாற்றில் திறந்து விடுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்த தோல் கழிவுகளால் பாலாறு படுக்கையில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகள் சிலர் பாலாறு நுரை பொங்கி ஓடும்போது மட்டும் ஆய்வு செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், பாலாற்றில் நுரை போன்று ஓடுவது வாணியம்பாடி குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவுகள் எனவும், தோல் கழிவு நீர் இல்லையெனவும் அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆனால், பாலாற்றில் கடந்த ஒரு வருடமாக தண்ணீர் ஓடுவதாகவும், ஆனால் நுரை பொங்கி ஓடாமல் மழை பெய்யும் பொழுது மட்டும் நுரை பொங்கி ஓடுவதாகவும், அதிகாரிகள் உண்மைக்கு புறம்பாக வேலை செய்து பாலாறு பாழாவதை வேடிக்கை பார்ப்பது வேதனையளிப்பதாக விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.