நீலகிரி: நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியைக் கொண்டதாகும். இப்பகுதியில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், சமீப காலமாக உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக, அவ்வப்போது மனித வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. அவ்வாறு வரும் வனவிலங்குகள் சில நேரங்களில் அப்பகுதி மக்களைத் தாக்குவதால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று (பிப்.13) குன்னூர் அருகே உள்ள உபாசி அலுவலகத்தில் இரவு நேரத்தில் உலா வந்த கரடி அப்பகுதியில் நீண்ட நேரமாகச் சுற்றித் திரிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்கு உள்ள அலுவலக அறை கதவை கரடி தன் கையால் உடைத்து அறைக்குள் செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப்பகுதி மக்களைப் பீதி அடையச் செய்துள்ளது.
ஏற்கனவே, கடந்த மாதம் குன்னூர் அறிஞர் அண்ணா உயர்நிலைப் பள்ளியில் உள்ள சமையலறையை உடைத்து. அங்குள்ள உணவுப் பொருட்கள், முட்டை, எண்ணெய் உள்ளிட்டவற்றைக் கரடி சேதப்படுத்திச் சென்ற நிலையில் தற்போது கரடி அலுவலகத்தை உடைத்து வெளியேறும் வீடியோ காட்சி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அன்று விரட்டப்பட்ட 'சேட்டைக்கார' யானை! இன்று மகனை அடக்க கும்கியாக வந்த 'சின்னத்தம்பி'!
இந்த நிலையில், குன்னூர் வனத்துறையினர் கரடி வருவதைத் தடுக்கும் வகையில் தானியங்கி சென்சார் சவுண்ட் கருவியைப் பொருத்தி அதன் மூலம் கரடி நடமட்டத்தை கண்டறிந்து, கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகின்றனர். இதுபோன்று வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வராத வண்ணம் வனத்துறையினர் விரைந்த கரடியைக் கூண்டில் பிடிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.