Published : Oct 31, 2023, 10:32 PM IST
பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கிய இலவச பட்டாவை ரத்து செய்ய கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுச் சமூகத்தினர் தர்ணா!
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அடுத்த லட்சிவாக்கம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதற்கு லட்சிவாக்கம் ஊராட்சியை சேர்ந்த பெரம்பூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த இடத்தை பொது விவகாரங்களுக்கு பயன்படுத்த ஏற்கனவே ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், எப்படி நிலத்தை வழங்கலாம்? எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், நேற்று (அக்.30) இரவு இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்ட நிலையில், கல்வீசி தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சிலர் தாக்கப்பட்டனர். இதையடுத்து ஏடிஎஸ்பி மீனாட்சி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிட மக்களுக்கு அரசு வழங்கிய இலவச பட்டாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், மாற்று இடத்தில் பட்டா வழங்க வேண்டும் எனவும் வழியுறுத்தி பெரம்பூர் கிராம மக்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.