அரசு சொகுசுப்பேருந்தில் கொசுத் தொல்லை.. சொந்த காசில் ஸ்பிரே அடித்து, வண்டியைக் கிளப்ப உதவிய பயணி
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வழியாக கோயம்புத்தூரில் இருந்து மதுரை நோக்கி அரசு சொகுசுப்பேருந்து ஒன்று நேற்று (மார்ச் 18) மாலை வந்து கொண்டிருந்துள்ளது. இதில் பயணிகள் பயணம் செய்து வந்த நிலையில், பேருந்தில் உள்ள ஏசி பெட்டிகள் ஆங்காங்கே சிதலமடைந்து காணப்பட்டுள்ளது. மேலும் பேருந்துக்குள் கொசுத் தொல்லையும் அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக 5 கிலோ மீட்டர் தூரம் கூட பயணிகளால் பயணம் செய்ய முடியவில்லை.
எனவே, பேருந்தில் இருந்த பயணி ஒருவர், பேருந்து நிலையத்தில் கீழே இறங்கி, தனது சொந்த பணத்தைக் கொடுத்து கொசு மருந்து ஸ்பிரே ஒன்றை வாங்கி வந்துள்ளார். பின்னர் அந்த மருந்தை பயணிகளை கீழே இறக்கி விட்டு, ஒவ்வொரு இருக்கைகளிலும் தெளித்துள்ளார். தொடர்ந்து 5 நிமிடம் பேருந்து நிறுத்தப்பட்டு, அதன் பின்னர் மதுரை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.
இது குறித்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தெரிவிக்கையில், “அரசுப் பேருந்தில் பட்டப்பகலில் கொசுத் தொல்லையால் பயணிகள் அவதிப்பட்டது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. சொகுசுப் பேருந்தில் ஆங்காங்கே ஏசி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது” எனத் தெரிவித்தனர். இதனிடையே இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.