சேலம்: திமுக ஆட்சி காலத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி அதிக வருவாய் கிடைத்தும் ஆண்டுதோறும் ஏன் அதிக கடன் வாங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதி மேலாண்மை குறித்த புரிதல் இல்லை என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை மூலமாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் இது குறித்து சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,"தமிழக அரசின் நிதி மேலாண்மை குறித்து சட்டமன்றத்தில் பேசியபோது அமைச்சர் முதலமைச்சர் உள்ளிட்டோர் அமைதியாக இருந்தனர். அதிக கடன் சுமை இருப்பதாக தான் தெரிவித்த கருத்துக்கு சட்டமன்றத்தில் நேரடியாக அவர்கள் பதில் கூறவில்லை.
அரசு அமைத்த குழு என்ன செய்தது?: இப்போது நிதி அமைச்சர் ஏன் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார்? நிதி மேலாண்மையை சீர்படுத்த திமுக அரசு அமைத்த குழு என்ன செய்து கொண்டிருக்கிறது? நிதி மேலாண்மை குறித்து அரசுக்கு அறிக்கை ஏதேனும் கொடுத்துள்ளதா? என்பதை திமுக அரசு விளக்க வேண்டும். நெருக்கடியிலும் சாதித்த அதிமுக அதிமுக ஆட்சிக்காலத்தின் போது தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் 36,000 கோடி செலவு செய்ய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால்தான் அதிமுக அரசுக்கு சிக்கல்களும் சவால்களும் இருந்தன. அதனை சமாளிக்க அப்போது பல லட்சம் கோடி செலவும் செய்தோம்.
நெருக்கடியான காலத்தில் ஆட்சி நடத்திய போது அதிமுக 3 லட்சத்து 53 ஆயிரம் கோடி மட்டுமே கடன் பெற்று இருந்தது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெட்ரோல் மற்றும் மதுபான விற்பனை, மின்சார வரி, ஜி எஸ் டி, கலால் வரி, வாகன வரி, மத்திய அரசின் நிதி பங்களிப்பு என அதிமுக ஆட்சிக் காலத்தை விட திமுக அரசுக்கு 24, 830 கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது. மொத்தமாக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 894 கோடி தமிழக அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
இதையும் படிங்க: எல்கேஜி முதல் பட்டமேற்படிப்பு வரை இலவச கல்வி...டெல்லி தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி!
வருவாய் உயர்வு இருக்கும் நிலையில் மூலதனவு செலவு இல்லை, ஆனால் மூன்று லட்சத்து 53 ஆயிரத்து 392 கோடி ரூபாயை திமுக அரசு கடனாகப் பெற்றது ஏன்? திமுக ஆட்சி காலம் முடிவதற்குள் தமிழகத்தின் கடன் சுமை ஐந்து லட்சம் கோடியாக அதிகரிக்கும். இந்த சாதனையைத்தான் திமுக அரசு செய்ய உள்ளது.
செந்தில் பாலாஜிக்குத்தான் பொருத்தம்: அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும் சேகர் பாபுவும் என்னை அமைதிப்படை அம்மாவாசை என்று விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் இருவரும் அரசியல் வியாபாரிகள் . அவர்கள் அதிமுகவில் இருந்தபோது சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களை எப்படி எல்லாம் விமர்சனம் செய்தார்கள் என்பது இன்றைக்கும் அவைக்குறிப்பில் உள்ளது.
செந்தில் பாலாஜிக்குத்தான் அமைதிப்படை அமாவாசை என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். சேகர்பாபுவும் செந்தில் பாலாஜியும் அரசியலில் வேடந்தாங்கல் பறவை போன்றவர்கள் . சில காலம் ஒரு இடத்தில் இருப்பார்கள் .சில காலம் வேறு இடத்திற்கு சென்று விடுவார்கள், இதுதான் அவர்களுடைய நிலைபாடு. கட்சியின் மீது விசுவாசம் இருப்பவர்கள் என்னை போன்று ஓரிடத்தில் நின்று பொறுமை காப்பார்கள்.
ராமநாதபுதபுரம் மாவட்டம் மற்றும் டெல்டா பகுதிகளில் மழை பெய்து ஏராளமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாழாகி உள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வீணானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோன்று 20 விழுக்காடு ஈரப்பதம் உள்ள நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்,"என்றார்.