ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'தர்பார்'. இப்படம் வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கடந்த சில தினங்களாக புகார் எழுந்து வந்தன. இதனையடுத்து இன்று விநியோகஸ்தர்கள் ராஜேந்திரன், பன்னீர் செல்வம், பெல் ஆர்ட்ஸ் மணி, கே.கிருஷ்ணன், காளியப்பன், திருவேங்கடம், சரவணன், மீடியேட்டர் ராஜு, தர்மன் ஆகியோர் ரஜினியை நேரில் சந்தித்து முறையிட போயஸ் கார்டன் ரஜினி இல்லத்திற்குச் சென்றனர்.
அப்போது அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் விநியோகஸ்தர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது விநியோகஸ்தர் திருவேங்கடம், ' ரஜினியையும் முருகதாஸையும் நம்பி தான் இந்தப் படத்தை விலை கொடுத்து வாங்கினோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் ஓடவில்லை. இதனால் 40 விழுக்காடு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒன்பது நாட்கள் விடுமுறை இருந்தும், இந்தப் படத்தால் 25 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.
இந்தப் படம் திரையரங்கில் கூட்டம் இல்லாமல் ஓடுகிறது என்று லைகா நிறுவனத்திடம் தெரிவித்தோம். அதற்கு அவர்கள் தங்களுக்கு 60 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களால் எதுவும் செய்ய இயலாது என்று கூறியதோடு, தர்பார் படத்தின் 70 விழுக்காடு பணம் ரஜினிக்கும் முருகதாஸூக்கும் சம்பளமாக வழங்கப்பட்டது எனத் தெரிவித்தனர். எனவே, நீங்கள் அவர்களிடம் சென்று முறையிடுங்கள் என்று கூறினர்.
இதனையடுத்து நாங்கள் ஏ.ஆர். முருகதாஸ் அலுவலகத்திற்குச் சென்ற பொழுது எங்களை சந்திக்க முடியாது என்று தெரிவித்து விட்டதாகக் கூறினார். இதனால் எங்கள் குறைகளை ரஜினியிடம் எடுத்து கூறுவதற்கு இங்கு வந்தோம். ஆனால், எங்களுக்கு ரஜினியைச் சந்திக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக உள்ள டி. ராஜேந்தர் அவர்களிடம் முறையிட உள்ளோம்' என்றார்.
இதையும் படிங்க: