குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். இதையடுத்து, அமெரிக்க மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இந்தியாவின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருவதால் அமெரிக்க குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். கடந்த சில நாட்களாக தேசிய தலைநகர் பகுதியில் அமைதியாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
போராட்டம் குறித்து அறிந்துகொள்ள உள்ளூர் செய்திகளைப் பார்த்து தெரிந்துகொண்டு அங்கு போவதை தவிருங்கள். உத்தரப் பிரதேசத்தில் வன்முறையான வழியில் போராட்டம் நடைபெற்றுவருவதால் அங்கு எச்சரிக்கையுடன் செல்லுங்கள். ஆக்ரா, தாஜ் மஹால் சுற்றியுள்ள பகுதிகள் அமைதியாக இருக்கின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட 20 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கும், இஸ்லாமிய அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: மோடி கடவுளாக தெரிகிறார் - மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்