ஆடி மாத பிரதோஷம்: அண்ணாமலையார் கோயில் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் - Aadi month pradosham
Published : Jul 20, 2024, 12:40 PM IST
திருவண்ணாமலை: ஆடி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. பௌர்ணமி மற்றும் அமாவாசை வரும் இரண்டு தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு பிரதோஷம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷ தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெரிய நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.
பிரதோஷ தினத்தின் பொழுது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். நேற்று நடைபெற்ற ஆடி மாத வளர்பிறை பிரதேஷத்தினை ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.