சென்னை: வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கடத்தி ரூ.20 லட்சம் பறித்ததாக திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி கைது செய்யப்ட்ட 4 பேரும் தாக்கல் செய்த மனுக்களை சென்னை அமர்வு முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்திருந்தது. இந்நிலையில், ராஜா சிங் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (ஜன 22) விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் வழக்கில் விசாரணை இன்னும் நிறைவடைவில்லை என்றும், இந்த கடத்தல் வழக்கில் மேலும் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவரை காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்த உள்ளதால், ஜாமீன் கோரிய விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வேலியே பயிரை மேய்வது போல் காவல்துறையினரே குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்ட இந்த வழக்கினை சாதாரண வழக்காக எடுத்து கொள்ள முடியாது என கருத்து தெரிவித்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.