ஹைதராபாத்: நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நேற்று (பிப்.1) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதுகுறித்து இந்திய தேசிய விதைக் கழகத்தின் இயக்குநர் இந்திர சேகர் சிங் ஈடிவி பாரத்திற்கு எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.
அதில், "நிர்மலா சீதாராமன் 'வளர்ச்சியின் முதல் இயந்திரமாக விவசாயத்தை' வைத்துள்ளது மனதைத் தொடும் வகையில் உள்ளதாகவும், கிராமப்புற கடன் முதல் வருமான வீழ்ச்சி வரை என பல்வேறு பிரச்சனைகளுக்காக இந்திய விவசாயம் போராடி வருகிறது. இந்நிலையில் அமைச்சரின் பட்ஜெட் பட்டியலில் விவசாயம் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது" எனவும் இந்திர சேகர் சிங் தெரிவித்துள்ளார்.
தன்-தான்ய கிரிஷி யோஜனா திட்டம்:
மேலும், "அமைச்சரின் உரையின் போது 2025 -2026ஆம் ஆண்டிற்கான அரசின் நோக்கமும், வேளாண் திட்டமும் தெளிவாகியுள்ளது. இதில் நிதியமைச்சர் சில புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியும், முந்தைய திட்டங்களுக்கு கூடுதல் நிதியையும் வழங்கியுள்ளார். ஒட்டுமொத்த நடவடிக்கையும் அரசின் தொலைநோக்கு பார்வையைக் குறிக்கிறது. அதாவது, புதிய பட்ஜெட் பட்டியலில், முதலில் பிரதம மந்திரியின் தன்-தான்ய கிரிஷி யோஜனா (PM Dhan-Dhaanya Krishi Yojana) திட்டம் இருந்தது. இதில், குறைந்த உற்பத்தித்திறன், குறைந்த கடன் அளவு மற்றும் மிதமான பயிர் தீவிரம் கொண்ட 100 மாவட்டங்களில் கவனம் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களின் வளர்ச்சி:
இதற்கான பொருள், அரசாங்கம் பசுமைப் புரட்சி தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படாத பகுதிகளில் கவனம் செலுத்துகிறது என்பதாகும். பொதுவாக, தொலைதூரப் பகுதிகளில் (Remote areas) குறைந்த அளவு விளைச்சலே இருக்கும் மற்றும் குறைவான கிராமப்புற கடனையே பெறுகின்றனர். பசுமைப் புரட்சி தொழில்நுட்பம் இருந்தாலும், சுற்றுச்சூழல் அல்லது தண்ணீர் பிரச்சினைகள் காரணமாக, முழு திறனையும் பயன்படுத்த முடியாத மழைநீர் சார்ந்த பகுதிகளும் (Rain-fed areas) இதில் அடங்கும்.
நீர்ப்பாசனத்தை அதிகரிப்பதன் மூலம் விவசாய உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், நீண்ட மற்றும் குறுகிய கால கடன் கிடைப்பதை எளிதாக்கவும், அதேநேரத்தில் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்கவும் அரசாங்கம் விரும்புகிறது. இந்த திட்டம் 1.7 கோடி விவசாயிகளைச் சென்றடைய நமது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பலதரப்பட்ட வங்கிகளில் நிதியுதவி:
வேளாண்மையில் நிதியமைச்சர் தாக்கல் செய்த இரண்டாவது முக்கிய கருப்பொருள், 'கிராமப்புறங்களின் செழிப்பு மற்றும் மீள்தன்மையை' உருவாக்குதல். இதன் கருப்பொருள் 'நாட்டில் இடப்பெயர்வு ஒரு விருப்பமாக மாறவேண்டுமே தவிர, ஒரு தேவையாக இருக்கக்கூடாது' என நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். இது, திறன் மேம்பாடு, முதலீடுகள், விவசாயத்தில் புதிய உலகளாவிய தொழில்நுட்பங்களை விவசாயிகளின் வயல்களுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றின் மூலம் கிராமப்புறத் துறையை மேம்படுத்தும் எனப் பன்முக அணுகுமுறையை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. மேலும், வேளாண்மையின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு வங்கிகளின் உதவியுடன் நிதி உருவாக்கப்படும்.
தாமரை விதையின் உற்பத்தி அதிகரிப்பு:
புதிய உணவு போக்கைக் கவனத்தில் கொண்டு, பீகாரில் மகானா வாரியத்தை (Makhana Board) உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பு தாமரை விதையின் உற்பத்தியை மேம்படுத்தவும், பதப்படுத்துதல், மதிப்பை கூட்டுதல் மற்றும் சந்தை படுத்துதலை மேம்படுத்த உதவும். இதற்காக FPO பதாகையின் கீழ், உற்பத்தியாளர்களை ஒழுங்கமைக்க ஒரு சிறப்பு அழைப்பு உள்ளது. அது ஒழுங்கமைக்கப்பட்டவுடன், உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவை அரசு வழங்கும் என நம்பலாம்.
கிசான் கிரெடிட் கார்டு:
கிசான் கிரெடிட் கார்டுகளுக்கான (KCC) கடன் வரம்பை அதிகரிப்பது தொடர்பாக மற்றொரு முக்கிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதாவது மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணை வியாபாரிகள் தங்கள் கிரெடிட் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம். கூடுதல் கடன் வரிகளை வழங்குவதன் மூலம், விவசாயிகள் கடனிலிருந்து வெளியேற இந்த அதிகரிப்பு உதவலாம்.
சீரற்ற வானிலை விவசாயிகளின் லாபத்தை அரித்து வருகிறது. கூடுதலாக உள்ள இரண்டு லட்சம் அவர்கள் மற்றொரு பருவத்தில் விதைக்கவும், கடனிலிருந்து தப்பிக்கவும் ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்பது அரசின் நோக்கமாகத் தெரிகிறது..
காய்கறிகள் மற்றும் பழங்கள்:
காய்கறிகளின் விலை ஏற்ற இறக்கத்தை சமாளிக்க மாநிலங்களுடன் இணைந்து விரிவான திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் நோக்கம், விநியோகச் சங்கிலி (supply chain logistics), பதப்படுத்துதல் மற்றும் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்கும் முறை ஆகியவற்றை உள்ளடக்கி காய்கறி உற்பத்தி அமைப்பை மீண்டும் புத்துயிர் பெற வைப்பதாகும்.
பருப்பு கொள்முதல்:
சமையல் எண்ணெய்கள் மற்றும் பருப்பு வகைகளில் உணவு இறையாண்மை மற்றும் தன்னிறைவு பிரச்சினையைச் சமாளிக்க, பருப்பு வகைகள் விநியோகம் மற்றும் உற்பத்தியை வலுப்படுத்துவதற்கான 6 ஆண்டுக் கால பணியை அரசாங்கம் தொடங்கும் என்று நிதியமைச்சர் கூறினார். இத்திட்டம் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தும்.
அடுத்த நான்கு ஆண்டில் விவசாயிகளிடம் இருந்து அதிகபட்சமாக மூன்று விதமான பருப்புகளை மத்திய அரசு கொள்முதல் செய்யும் என்றும் நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார். இது, விவசாயிகளுக்கு நியாயமான விலை சென்றடைவதை உறுதி செய்வதற்கும், விலை ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தி, நாட்டில் போதுமான அளவு பருப்பு இருப்பு இருப்பதற்கும் ஒரு நல்ல படியாக இருக்கும்.
கடைசியாக ஒரு முக்கிய அறிவிப்பு என்னவென்றால், விதையின் தரம் மற்றும் விவசாய விதை முறையை மேம்படுத்த, விவசாயிகளுடன் இணைந்து அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசிய இயக்கத்தைச் செயல்படுத்துவதுதான். இதில், ஜூலை மாதம் முதல் 100 புதிய விதை வகைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், விரைவாக மேலும் வெளியிடப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அசாமில் யூரியா உற்பத்தி ஆலை:
நம் நாட்டில் விவசாயத்திற்கு உள்ள ஆதரவைப் பொறுத்தவரை, ரசாயன உரத்தின் விலை அதிகமாக இருப்பதை நிதியமைச்சர் கண்காணித்து வந்திருக்கலாம். அதாவது, உலகளாவிய உர விலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலையானதாக இருந்தாலும் கூட, நாட்டின் சில பகுதிகள் சரியான நேரத்தில் பயிர்களுக்கு ரசாயன உரங்களைப் பெறுவதில் கடைசியாகவே உள்ளன. அதனால், அசாமில் யூரியா உற்பத்தி ஆலையை அறிவித்துள்ளது. இது, வடமாநிலங்கள் தங்களது தேவைகளுக்கு போதுமான யூரியாவை வைத்திருப்பதை உறுதி செய்யும்.
பட்ஜெட்டில் உள்ள KCC வரம்புகள் மற்றும் பிரதம மந்திரி தன்-தான்யா கிருஷி யோஜனா போன்ற முக்கிய அம்சங்கள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டால், கிராமப்புறத்துறையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இது மோடி அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகளுடன் சந்தித்த பல்வேறு விவசாய பிரச்சனையிலிருந்து மீள உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
(பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் எழுத்தாளரின் கருத்துகளே. இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள உண்மைகளும், கருத்துகளும் ETV பாரத் ஊடகத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை)