திண்டுக்கல்: ஆங்கில புத்தாண்டு தினத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பல்வேறு கரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்கு வருகை புரிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் 17 நாள்களில் உண்டியல்கள் அனைத்தும் நிரம்பின.
இதனையடுத்து ஜனவரி 11, 12ஆம் தேதிகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. இரண்டு நாள்கள் எண்ணிக்கையில் மொத்த காணிக்கை வரவாக 4 கோடியே 33 இலட்சத்து 56 ஆயிரத்து 610 ரூபாய் கிடைத்துள்ளது.
மேலும் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு, வெள்ளியால் ஆன காவடி, வீடு, தொட்டில், வேல், கொலுசு உள்ளிட்டவைகளையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதில் தங்கம் ஆயிரத்து 121 கிராம், வெள்ளி 17 ஆயிரத்து 736 கிராமும் கிடைத்துள்ளன.