ஹைதராபாத்: சர்வதேச அளவில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பல புள்ளி விவரங்கள் மற்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், 15 - 19 வயதுடைய வளரிளம் பெண்கள் தங்களது காதலர்கள் உள்ளிட்ட துணைகளால் உடல் மற்றும் பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாவதாக உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்ட தி லான்செட் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்கள் சுகாதாரம் என்ற புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இதில் சர்வதேச அளவில் 19 மில்லியன், அதாவது 24 சதவீத வளரிளம் பெண்கள் தங்களது துணைகளால் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், பொதுவாக 6-ல் ஒருவர் இத்தகைய பாதிப்பை தங்களது 20 வயதுக்குள் அனுபவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தங்களது துணைகளால் பாதிக்கப்படும் வளரிளம் பெண்கள் மனம் மற்றும் உடல் ரீதியாக பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றனர்.
இதன்படி, வளரிளம் பெண்களின் ஆரோக்கியம், கல்வி, கல்வி அல்லது தொழில் சார்ந்த சாதனை, எதிர்கால உறவுகள் மற்றும் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் பிற வாய்ப்புகள் ஆகியவற்றை இழக்கின்றனர். அதேநேரம், துணைகளால் நேரும் வன்முறையால் உடலில் காயங்கள், மன அழுத்தம், கவலை, திட்டமிடப்படாத கர்ப்பம், பாலியல் உறவு சார்ந்த நோய்கள் ஆகியவற்றிற்கு உள்ளாவதகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.
வளரிளம் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள்: தங்களது சமூக வரையறை, பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு கூறுகளால் வளரிளம் பெண்கள் துணைகளால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன்படி, உலக அளவில் அதிகபட்சமாக ஒசானியாவில் 47 சதவீதம் மற்றும் மத்திய புற சஹாரான் ஆப்பிரிக்காவில் 40 சதவீதம் வளரிளம் பெண்களும் தங்களது துணைகளால் உடல் மற்றும் பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகின்றனர். அதேநேரம், குறைந்தபட்சமாக மத்திய ஐரோப்பாவில் 10 சதவீதம் மற்றும் மத்திய ஆசியாவில் 11 சதவீதம் பேரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில், குறைந்தபட்சம் 6 சதவீதம் வளரிளம் பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளரிளம் பெண்கள் வன்முறைக்கு உள்ளாவதன் முக்கிய காரணி என்ன? உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள், மாகாணங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிகபட்சமாக வளரிளம் பெண்கள் இந்த வன்முறைக்கு உள்ளாவதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், உயர்நிலை பள்ளிப்படிப்பை முடிக்காமல் இருத்தல், சட்டரீதியாக சொத்துரிமை இல்லாமல் இருத்தல் என ஆண்களை விட பெண்கள் அனைத்து உரிமைகளிலும் குறைவாக இருக்கும்போது வளரிளம் பெண்கள் தங்கள் துணைகளால் இத்தகைய இன்னலுக்கு ஆளாகின்றனர்.
அது மட்டுமல்லாமல், குழந்தைத் திருமணம், தனது துணையின் வயது வித்தியாசங்களால் உருவாகும் தங்களது உரிமையின் நிலைத்தன்மை இல்லாமை, பொருளாதாரத்திற்காக இன்னொருவரை சார்ந்திருத்தல் மற்றும் சமூகத்தில் தனித்து இருத்தல், போன்றவற்றாலும் வளரிளம் பெண்கள் தங்களது துணைகளால் பாலியல் அல்லது உடல் ரீதியான வன்முறைக்கு ஆளாவதாக WHO-இன் சராசரி கூறுகள் தெரிவிக்கிறது.
வளரிளம் பெண்களுக்கு எதிரான வன்முறையை எவ்வாறு தடுப்பது? இதனை பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆணுக்கும் கற்றுக் கொடுத்தல் மிக முக்கியமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. எனவே, இது குறித்து மாணவப் பருவத்திலேயே பள்ளிகளில் ஆண் - பெண் இடையிலான ஆரோக்கியமான உறவுகள், வன்முறைக்கான முன்னெச்சரிக்கைகள், சட்ட ரீதியிலான பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஆற்றல் அல்லது தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வளரிளம் பெண்கள் வன்முறை குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன? சர்வதேச அளவில் அதிகரித்து வரும் துணைகளால் வளரிளம் பெண்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்பது ஒரு பொதுவான ஆரோக்கிய பிரச்னை. எனவே இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதற்கான ஆதரவை அளித்தல் அவசியம் என உலக சுகாதார மையத்தில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் ஆய்வு துறையின் இயக்குனர் டாக்டர் பாஸ்லே அல்லாட்டி கூறியுள்ளார்.
அதேபோல், அனைத்து நாடுகளும் இம்மாதிரியான பாலினம் சார்ந்த வன்முறைகளுக்கு எதிராக விதிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு பெண்கள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு எதிரான பாதிப்புகளில் இருந்து மீட்க வேண்டும் என உலக சுகாதார மையத்தில் பெண்கள் தரவுகள் மற்றும் அளவீடுகளுக்கு எதிரான வன்முறைகளின் தொழில்நுட்ப அதிகாரி டாக்டர் லியான்மேரி சர்டின்ஹா கூறியுள்ளார்.
மேலும், தற்போது வரை பெண்கள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு எதிரான வன்முறையை குறைக்கும் வழியில் எந்த நாடுகளும் ஈடுபடவில்லை எனக் கூறும் உலக சுகாதார அமைப்பு, வளரிளம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முழுவதுமாக நீக்க வழிமுறைகளை மேற்கொள்ள அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் தங்களது ஆதரவை பல்வேறு வழிகளில் வழங்க WHO தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உங்க ஆபீஸ் டாய்லெட் க்ளீனா இருக்கா.. பெண்களின் உரிமைகளை பட்டியலிடும் WHO!