சென்னை: தேனாம்பேட்டையைச் சேர்ந்த மேகப்பிரியன் (17), தந்தை இறந்த நிலையில் தாய் மஞ்சுளாவுடன் வசித்து வந்தார். மேகப்பிரியன் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், இன்று நண்பர்களுடன் சேர்ந்து மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். அங்கு கூடைப்பந்து விளையாடிவிட்டு ஐந்து பேரும் மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது, நான்கு பேர் மணலுக்கு வந்த நிலையில், மேகப்பிரியன் மட்டும் கடலில் குளித்தபடியே இருந்துள்ளார்.
Published : 12 hours ago
மெரினா கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த பள்ளி மாணவன் மாயம்.. கதறி அழுத தாய்!
திடீரென மேகப்பிரியன் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு நான்கு நண்பர்களும் அவரை மீட்பதற்காக போராடியுள்ளனர். முடியாததால், உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீவிரமாக தேடியும் மாணவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், மாணவரின் தாய் மெரினா கடற்கரைக்கு வந்து கதறி அழுதார்.