தமிழ்நாடு

tamil nadu

கோவை வேளாண் பல்கலையில் 20 புதிய பயிர்கள் அறிமுகம் !

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 3:59 PM IST

கோயம்புத்தூர்: கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்படும். அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான 20 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டது. இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று (பிப்.03) வெளியிட்டார்.

வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் என 20 புதிய ரகங்கள், தமிழ்நாடு அரசின் மாநிலப் பயிர் ரகங்கள் வெளியீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், “தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும் விவசாயிகளுக்காக புதிய ரகங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம்.

அந்த வகையில், இந்த வருடம் இருவழி வீரிய ஒட்டு ரகம், பாஸ்மதி அல்லாத வாசனை கொண்ட நீள் சன்ன ரகம், இனிப்புச் சோளம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் பசுந்தாள் உரப்பயிர் போன்ற பயிர்களில் தலா ஒரு ரகம் வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பன்னீர் திராட்சை, பலா, வாழை என மூன்று பழப்பயிர்களும் கத்திரி, கொத்தவரை, வெள்ளைத்தண்டுக்கீரை, சிவப்புக்கீரை மற்றும் முருங்கை என ஐந்து காய்கறிப் பயிர்களும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விவசாயப் பெருமக்கள் சாகுபடி செய்து பயன்பெறுமாறு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார். 

ABOUT THE AUTHOR

...view details