கீழடி 10ஆம் கட்ட அகழாய்வு; தந்தத்தாலான ஆட்டக்காய் கண்டெடுப்பு! - Keezhadi Excavation
Published : Jul 14, 2024, 10:23 AM IST
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழக அரசின் தொல்லியல் துறையின் சார்பாக கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல் பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இங்கு இதுவரை இரு குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து கண்ணாடி மணிகள், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பதிக்கப்பட்ட பானை ஓடுகள், சுடுமண் பானை உள்ளிட்ட உள்ளிட்ட தொல்லியல் சின்னங்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் நேற்று 120 செ.மீ. ஆழத்தில் தந்தத்தாலான ஆட்டக்காய் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. உருளை வடிவிலான உடற்பகுதியை உடைய இந்த ஆட்டக்காய் சற்று அரைக்கோள வடிவ தலைப்பகுதியையும் தட்டையான அடிப்பகுதியையும் கொண்டுள்ளது. சிறிய அளவிலான இந்த ஆட்டக்காய் 1.3 செ.மீ உயரமும், 1.5 செ.மீ விட்டம் கொண்ட தலைப்பகுதியையும், 1.3 செ.மீ விட்டம் கொண்ட அடிப்பகுதியையும் கொண்டுள்ளது.
கருமை நிறத்துடன் பளபளப்பான மேற்பரப்புடன் இந்த ஆட்டக்காய் காணப்படுகிறது. தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கிடைத்திருப்பதன் வாயிலாக கீழடியில் மேம்பட்ட தமிழச் சமூகம் வாழ்ந்ததற்கான சான்றாகக் கருதலாம் என தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.