Published : Feb 18, 2024, 6:08 PM IST
மயிலாடுதுறையில் தொண்டர்கள் படை சூழ.. குதிரை வண்டியில் வலம் வந்த எடப்பாடி பழனிசாமி..!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளரின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (பிப்.18) நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களுக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சுமார் இரண்டு அடி உயரத்தில் முருகர் சிலை ஒன்றை மணமக்களுக்குப் பரிசாக வழங்கினார்.
அதன்பின், மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய சுமார் 3,000க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சீர்காழியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார்.
அவரை சீர்காழி பழைய பேருந்து நிலையத்திலிருந்து 150க்கும் மேற்பட்ட புல்லட் வாகனம் முன்னே பேரணியாகச் செல்ல, புதிய பேருந்து நிலையம் வழியாகக் கட்சியில் இணையும் விழா நடைபெறும் தென்பாதியில் உள்ள மார்கோனி கார்டனுக்கு அதிமுகவினர் அழைத்துச் சென்றனர்.
தென்பாதி பகுதியிலிருந்து பேண்ட் வாத்தியங்கள் முழங்கக் குதிரை சாரட் வண்டியில், எடப்பாடி பழனிச்சாமியை அமர வைத்து கட்சி தொண்டர்கள். புடை சூழ ஊர்வலமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, குதிரை சாரட் வண்டி செல்லும் வழி நெடுகிலும் அதிமுக தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.