தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

பிஎஸ்என்எல் 5ஜி-க்கு ரெடி: புதிய லோகோ உடன் ஏழு சூப்பர் திட்டங்கள்!

அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், ஆரஞ்சு நிறத்தை முன்னிறுத்தி தேசியக் கொடியைப் பிரதிபலிக்கும் மூவர்ண நிறத்தில் இலச்சினையை வெளியிட்டுள்ளது. மேலும், மக்களுக்குத் தேவையான 7 திட்டங்களையும் அறிமுகம் செய்தது.

bsnl launched 7 new super plans and new logo to express 5g ready
புதிய லோகோ உடன் ஏழு சூப்பர் திட்டங்களை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல். (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tech Team

Published : 6 hours ago

பிஎஸ்என்எல், அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ளது. பல கோடி பயனர்கள் இந்த இணைப்பைப் பயன்படுத்தி வரும் நிலையில், நிறுவனம் புதிதாக 4ஜி சேவைகளை அறிமுகம் செய்தது. தொடர்ந்து 5ஜி சேவைகளை நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற முனைப்பில் பிஎஸ்என்எல் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் புதிய இலச்சினை (லோகோ) அறிமுகம் செய்யப்பட்டது.

ஆரஞ்சு நிறத்தை முன்னிறுத்தி தேசியக் கொடியைப் பிரதிபலிக்கும் மூவர்ண நிறத்தில் இலச்சினையை தயார் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் ஒன்றிய அமைச்சர் 7 புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்தார். மேலும், லோகோவில் இருந்த ‘கனெக்டிங் இந்தியா’ மாற்றப்பட்டு ‘கனெக்டிங் பாரத்’என்று போடப்பட்டுள்ளது.

புதிய பிஎஸ்என்எல் லோகோ (X / @BSNLCorporate)

முன்னதாக, பிற நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில், பல இடங்களில் நெட்வொர்க் பிரச்சினைகள் எழுந்தன. இவற்றை சமாளித்து வரும் நிறுவனம், 5ஜி சேவைகளை நாட்டில் அறிமுகம் செய்ய முனைப்புக் காட்டி வருகிறது. தனியார் போட்டி நிறுவனங்களை விட திட்டங்களை பிஎஸ்என்எல் மலிவாக கொடுக்கிறது என்றாலும், நெட்வொர்க் பிரச்சினைகளை சரிசெய்தால், இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

7 புதிய திட்டங்கள் என்ன?

  • மக்களுக்கு சீரான மொபைல் சேவை வழங்கும் விதமாக, ஸ்பேம் கால்களை தானாக பிளாக் செய்யும் தொழில்நுட்பத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இதன் வாயிலாகத் தேவையில்லாத அழைப்புகளைத் தவிர்க்கலாம்
  • இலவச வைஃபை ரோமிங் சேவை: பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் நாட்டில் எந்த மூலைக்குச் சென்றாலும், பிஎஸ்என்எல் ஹாட்ஸ்பாட்டை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனால், தேவையில்லாமல் மொபைல் டேட்டாக்களை இழக்க நேரிடாது.
  • ஃபைபர் அடிப்படையிலான டிவி சேவை: ஃபைபர் பிராட்பேண்டு வைத்திருப்பவர்கள் 500 தொலைக்காட்சி அலைவரிசைகளை நேரலையில் கண்டுகளிக்கலாம். இதற்காக செலவாகும் ஃபைபர் பிராட்பேண்ட் டேட்டாவை பிஎஸ்என்எல் கணக்கில் எடுத்துக்கொள்ளாது என்பது இதில் சூப்பர் ஆஃபர்.
  • மக்கள் சிம் கார்டுகளை வாங்க, மாற்ற, ரிசார்ஜ்-களை மேற்கொள்ள தானியங்கி கியாஸ்குகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • C-DAC உடன் இணைந்து சுரங்க நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு 5ஜி நெட்வொர்க்கை பிஎஸ்என்எல் வழங்கவுள்ளது. இந்த புதிய நெட்வொர்க் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதில் மேம்பட்ட கருவிகள் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பை செயல்படுத்துவதன் வாயிலாக சுரங்கங்களில் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதை உறுதி செய்கிறது.
  • இந்தியாவின் முதல் டைரக்ட் டூ டிவைஸ் (D2D) இணைப்பு முறையை அறிமுகம் செய்துள்ளது. இது செயற்கைக்கோள் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை ஒன்றோடு ஒன்று இணைக்கிறது. இந்த புதுமையான சேவையின் வாயிலாக, அவசர காலகட்ட அழைப்புகள், இணைப்பு இல்லாத இடங்களிலும் டிஜிட்டல் சேவைகள் போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.
  • கடைசியாக பிஎஸ்என்எல் சாத்தியமான சந்தாதாரர்களுக்கு ஒரு அற்புதமான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தனித்துவமான மொபைல் எண்களைப் பெறுவதற்கான வாய்ப்பை இணையத்தில் வழங்கியுள்ளது. அதன்படி, 9444133233, 94444099099 போன்ற எண்களை மின் ஏலத்தின் வாயிலாக வாங்கிக் கொள்ளலாம். தற்போது சென்னை, உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய மூன்று மண்டலங்களில் இந்த ஏலம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க
  1. ஐபிஎல் போட்டிகள் இனி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தான்; ரிலையன்ஸ் புதிய வியூகம்!
  2. சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன்: 128ஜிபி விலைக்கு 256ஜிபி வேரியன்ட்; அறிமுக சலுகையை மிஸ் பண்ணீராதீங்க!
  3. இலவச மின்சாரம் வேண்டுமா; ஒன்றிய அரசின் புதிய சோலார் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும்!

பிஎஸ்என்எல் கொண்டு வந்துள்ள இந்த முத்தாய்பான 7 திட்டங்கள் மக்களை கவர்ந்து கூடுதல் சந்தாதாரர்களை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை அரசின் தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் வலுத்திருக்கிறது. எனவே, சீரான் சேவை தொடர்ந்து கிடைக்கும்பட்சத்தில், பிஎஸ்என்எல் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று முதல் இடமான அரியணையில் அமர வாய்ப்பிருக்கிறது.

தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்குஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி'பக்கத்துடன் இணைந்திருங்கள்.

ABOUT THE AUTHOR

...view details