தமிழ்நாடு

tamil nadu

பேருந்துக்கும் தடுப்புக் கம்பிக்கும் இடையில் சிக்கி பெண் பரிதாப உயிரிழப்பு.. திருவேற்காடு அருகே சோகம்! - chennai bus accident

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 3:35 PM IST

chennai bus accident: திருவேற்காட்டில் சாலையில் நடந்து சென்ற பெண் மீது அரசுப் பேருந்து மோதியதில், சாலையோர தடுப்பு கம்பி மற்றும் பேருந்து இடையே சிக்கி அப்பெண் உயிரிழந்தார்.

திருவேற்காடு சாலை விபத்து குறித்த புகைப்படம்
திருவேற்காடு சாலை விபத்து குறித்த புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: திருவேற்காடு அடுத்த வடநூம்பல், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயா (58). இவர் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக திருவேற்காடு, வேலப்பன்சாவடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, தி.நகரில் இருந்து திருவேற்காடு நோக்கி வந்த அரசுப் பேருந்து, வேலப்பன்சாவடி மேம்பாலத்தின் மீது திரும்பிய போது எதிர்பாராத விதமாக எதிர் திசையில் நடந்து வந்த ஜெயாவின் மீது பேருந்தின் ஒரு பகுதி மோதியதில், பேருந்துக்கும், சாலையின் ஓரம் இருந்த இரும்பு தடுப்புக்கும் இடையே சிக்கி ஜெயா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் ஆனந்தம் (48) என்பவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை குறுகலாக இருப்பதாலும், பொதுமக்கள் நடந்து செல்ல போதிய வழி இல்லாததுமே இந்த விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், இதன் பின்னர் அப்பகுதியில் விபத்துகள் ஏதும் நடைபெறாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னை: பிறந்து 9 நாளே ஆன குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்.. கொடூரத் தந்தை சிக்கியது எப்படி? - infant murder in chennai

ABOUT THE AUTHOR

...view details