தமிழ்நாடு

tamil nadu

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு; பள்ளியை சிறப்பு அதிகாரியை வைத்து நிர்வகிக்க அரசு பரிந்துரை! - krishnagiri fake ncc camp issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 7:07 PM IST

Krishnagiri School fake NCC camp: போலி என்சிசி முகாம் நடத்திய கிருஷ்ணகிரி பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரைத்துள்ளதாக, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் -  கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் என்பவர் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட பன்னோக்கு சிறப்பு குழுவின் தலைமை ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், சிறப்பு குழு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கியதாகவும், பாதிப்பிலிருந்து விரைந்து மீண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு குழுக்கள் போலி என்சிசி முகாம் நடத்தப்பட்டதாக கூறப்படும் மற்ற பள்ளிகளுக்கும் சென்று, உளவியல் ஆலோசனைகளை வழங்கியதாகவும், போக்சோ புகார்களை எப்படி வழங்குவது, ஆசிரியர்கள் எப்படி கையாள்வது உள்ளிட்ட ஆலோசனைகளையும் விழிப்புணர்வையும் வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பந்தபட்ட மாணவிகளிடம் மன அழுத்தம் உள்ளதா என கண்டறியப்பட்டு உள்ளதாகவும், மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால பாதுகாப்பு குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், பெற்றோர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுபோல கல்லுரிகளில் மாணவர்களிடம் மன அழுத்தத்தை குறைக்க பிரத்யேக உளவியல் ஆலோசனை மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இதே போல பாலியல் தொந்தரவு பிரச்சனைகளை உதவி எண்களில் தெரிவிக்க ஊக்குவிக்கப்பட்டதாகவும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நடைமுறைகளை உருவாக்க, சிறப்புக்குழு அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், உரிய அனுமதி பெறாமல் என்சிசி முகாம் நடத்தப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அளித்துள்ள விளக்கம் ஏற்படையதாக இல்லை. முன்னுக்கு பின் முரணாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட பள்ளியை நிர்வகிப்பதற்காக சிறப்பு அதிகாரியை நியமிக்க தனியார் பள்ளி கல்வி இயக்குனருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பரிந்துரை தீவிர பரிசிலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, செப்டம்பர் 12ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

இதையும் படிங்க:பெண் குழந்தையை கொன்று புதைத்த கொடூர தம்பதி.. ஒன்பதே நாளில் நிகழ்ந்த துயரம்.. வேலூரில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details