தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு.. தமிழக அரசுக்கு வலுத்த முக்கிய கோரிக்கை! - tamil nadu deepavali package - TAMIL NADU DEEPAVALI PACKAGE

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய தீபாவளி தொகுப்பு வழங்கக் கோரி தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தீபாவளி தொகுப்பு வழங்க கோரிக்கை
தீபாவளி தொகுப்பு வழங்க கோரிக்கை (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2024, 11:51 AM IST

சென்னை: சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI(M)) மாநிலக் குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மின் கட்டணம் - சிறு, குறு உற்பத்தியாளர்களின் போராட்ட கோரிக்கை, தீபாவளி பண்டிகைக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் தொகுப்பாக ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்த வகையில், தமிழக ரேஷன் கடைகளில் தீபாவளியை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தீபாவளி தொகுப்பை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தில், “அக்டோபர் 31ஆம் தேதி அனைத்துப் பகுதி மக்களாலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் மிகக் கடுமையான விலைவாசி உயர்வின் காரணமாக, உழைக்கும் மக்களுக்கு இது தித்திக்கும் தீபாவளியாக அமைவதற்கு மாறாக திண்டாடும் தீபாவளியாக மாறிவிடும் சூழல் இருக்கிறது. சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலையும், நிரந்தர வருமானமும் சமூகத்தில் சிறு பகுதியினருக்குத் தான் இருக்கிறது. மிகப் பெரும்பாலானவர்கள் முறைசாராத் தொழிலாளர்களும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும், சிறு-குறு விவசாயிகளுமே ஆவர்.

இத்தகைய பகுதியினர் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத அளவிற்கு நாடு முழுவதும் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 7 கோடி பேர்களை உள்ளடக்கிய 2.25 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் கடைகளே ஆதாரமாக இருக்கின்றன. இதனைக் கணக்கில் கொண்டு தீபாவளியை எதிர்கொள்வதற்கும் ரேசன் கடைகள் வழியாக அனைத்துப் பகுதி மக்களுக்கும் தேவையான பொருட்களை வழங்குவது பொருத்தமாக இருக்கும்.

இதையும் படிங்க:AIR Show பார்க்க மெரினா போறீங்களா? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

எனவே அரிசி, சர்க்கரை, மைதா, கடலை மாவு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு வகைகள், ரவை, மல்லி, மிளகாய் வத்தல், சீரகம், மிளகு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்குவதன் மூலம் 7 கோடி மக்கள் பயனடைய முடியும்.

எனவே ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தீபாவளி தொகுப்பாக வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது'' என குறிப்பிட்டுள்ளது.

வழக்கமாக, பொங்கல் பண்டிகையின்போது, ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை உள்ளடக்கிய தொகுப்பு வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியறுத்தியுள்ளது. இந்த கோரிக்கையை தமிழக அரசு செயல்படுத்தினால், தீபாவளியை முன்னிட்டு கோடிக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details