கர்நாடகா: மைசூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உடல்கள் உயிரிழந்த நிலையில். இன்று (பிப்.17) திங்கட்கிழமை காலையில் மீட்கப்பட்டுள்ளது. இது தற்கொலையா? அல்லது வேறு எதுவும் காரணமா? என வித்யாரண்யபுரா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், மைசூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா நகர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில், குடும்பத்துடன் வசித்து வந்தவர் சேத்தன் (45). இவருக்கு ரூபாலி என்ற பெண்ணுடன் திருமணமாகி 15 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில், இன்று காலை சேத்தன், அவரது மனைவி ரூபாலி (43), அவரது மகன் குஷால் (15) மற்றும் சேத்தனின் தாய் பிரியம்வதா (62) ஆகியோர் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வித்யாரண்யபுரா போலீசார், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உடல்களையும் உயிரிழந்த நிலையில் மீட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வித்யாரண்யபுரா போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சேத்தன் தனது குடும்பத்தினருக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும், நான்கு பேரின் உடல்களும் இரண்டு வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாகவும், சேத்தன் தனது குடும்பத்தை ஒரு வீட்டில் வைத்து கொலை செய்து விட்டு, மற்றொரு வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர்களின் மரணத்திற்கு அதிக கடன் சுமை காரணமாக கூட இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இருப்பினரும் மரணத்திற்கு சரியான காரணம் தற்போது வரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு நேரில் வந்த மாவட்ட காவல் ஆணையர் சீமா லட்கர், காவல் துணை ஆணையர் ஜான்ஹவி மற்றும் வித்யாரண்யபுரா இன்ஸ்பெக்டர் மோஹித் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை ஆணையர் சீமா லட்கர், "சேததன் ஹாசன் பகுதியைச் சேர்ந்தவர். முன்பு துபாயில் இயந்திர பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டுதான் மைசூரில் குடியேறியுள்ளார். தற்போது, சவுதி அரேபியாவிற்கு ஒப்பந்த தொழிலாளர்களை அனுப்பும் ஒப்பந்தரராக இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவரை கொலை செய்த மனைவி!
அவரது மனைவி மைசூரைச் சேர்ந்தவர். இந்த நிலையில், நேற்று (பிப்.16) மாலை கோரூரில் உள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, ரூபாலியின் சொந்த ஊருக்குச் சென்று இரவு உணவை சாப்பிட்டுள்ளனர். பின்னர், சேத்தன் அமெரிக்காவில் உள்ள தனது சகோதரர் பரத்ரை செல்போனில் அழைத்துப் பேசியுள்ளார். அப்போது, சந்தேகமடைந்த பரத், உறவினர்களை அழைத்து அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் சென்று பார்த்த போது, நான்கு பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் சேத்தன் குடும்பத்துடனும், அவரது தாய் ஒரு வீட்டிலும் என இரு வீட்டில் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இறப்புக்கான காரணம் தெரியவில்லை. பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் நிபுணர்கள் அறிக்கைக்குப் பின்னரே கூடுதல் தகவல்கள் தெரியவரும். இந்த சம்பவம் தொடர்பாக இன்று காலை 6 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.