தேனி: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே மேலசொக்கநாதபுரம் பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் திருநெல்வேலியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கல்லூரி விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
கல்லூரி அரியர் தேர்வு எழுதுவதற்காக கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி கல்லூரி விடுதியில் தங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி கல்லூரியின் விடுதியில் விக்னேஷ் நீண்டநேரமாக காணவில்லை என்பதால் பூட்டி இருந்த கழிவறையை விடுதி காப்பாளர் உடைத்துப் பார்த்தபோது கழிவறையில் அதிக ரத்தங்களுடன் மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து போடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடலை பார்த்த பெற்றோர் மாணவரின் கழுத்து, காது ஆகிய பகுதிகளில் காயங்களும், ஆசனவாய் பகுதியில் ரத்த காயங்களும் இருந்ததால் தங்களது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
ஆனால் அதற்கு, மாணவருக்கு வலிப்பு ஏற்பட்டு கழிவறையில் விழுந்ததால் ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், மாணவரின் உடலை மீட்கும்போது உடலில் எறும்புகள் கடித்திருந்ததால் காயங்கள் உண்டாகியதாகவும் போலீசார் தரப்பில் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக இறந்த மாணவரின் தாயார் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
போலீசாரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த பெற்றோர், மாணவரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறி, அவரின் உடலை பெறாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மாணவரின் உயிர் இழப்பிற்கு நீதி வேண்டுமெனக் கூறி போராட்டத்தில் இறங்கியுள்ளன.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று போராட்டம் தொடர்கிறது.
மாணவரின் உடலில் காயங்கள் மற்றும் கழிவறையில் இரத்தக்கறை தடயங்கள் இருந்ததால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரியும், கல்லூரியின் முதல்வர் மற்றும் விடுதி காப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரியும் இத்தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர், "மாணவர் உயிரிழப்பில் போலீசாருக்கு எந்த சந்தேகமும் கிடையாது. மாணவர் உயிரிழந்தது குறித்து டிஎஸ்பி தலைமையில் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டு மாணவரின் பெற்றோருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது பெற்றோர் சிபிசிஐடி விசாரணை வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்." என்று தெரிவித்தார்.
இந்நிலையில் உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து மூன்று நாட்களாக அவரது குடும்பத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, மாணவரின் மரணம் குறித்து, பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 194, சிஆர்பிசி சட்டப்பிரிவு 174 ஆகிய பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.