வேலூர்:முன்னாள் ஆளுநரும், தென் சென்னை நாடாளுமன்ற பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன், இன்று தனது பிறந்தநாளை ஒட்டி, குடியாத்தம் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி ஆனந்தனைச் சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர், அத்தி இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்பொழுது தமிழிசையின் தந்தை குமரி ஆனந்தன், ‘வெற்றி திருமகள் வாழ்க வெற்றி திருமகள் வாழ்க’ என தனது மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுகையில், "தன்னுடைய பிறந்தநாள் செய்தியாக என்னுடைய வாழ்க்கை முழுவதும் பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்துள்ளேன். மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் சேவை செய்ய வேண்டும்.
அதற்காக தான், நான் தேர்தலில் போட்டியிட்டேன். எனக்கு மக்கள் ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற்றவுடன் மக்களுக்காக பாடுபடுவேன். அதிக அளவில் படித்தவர்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள் எல்லோரும் பொது வாழ்க்கைக்கு வந்தால் தான் அரசியல் தூய்மைப்படுத்தப்படும்.
பொது வாழ்க்கை என்பது மக்களுக்காக இல்லாமல், தனக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் என மாறி வருகிறது. தமிழகத்திலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்கிறார் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.