சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற குரல் சமீப நாட்களாக திமுக நிர்வாகிகள் மத்தியில் எழுந்தது. திமுகவைச் சேர்ந்த பல அமைச்சர்களும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். அந்த விருப்பம் தற்போது நிறைவேறியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் முதன் முதலில் சட்டமன்ற உறுப்பினரான உடனேயே அமைச்சராக பொறுப்பேற்றார். இதன் பின்னர், துணை முதல்வராக உதயநிதி பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் உதயநிதி சந்திக்க உள்ள சவால்கள் என்ன? மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மூத்த பத்திரிகையாளர் ஷபீரிடம் ஈடிவி பாரத் முன்வைத்தது.
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்த அவர், "உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு கட்சியில் எந்த எதிர்ப்பும் இல்லை. எதிர்க்கட்சியினரும் பெரிதாக எதிர்ப்புகளையோ, விமர்சனங்களையோ முன்வைக்கவில்லை.
ஆனால், தேர்தலுக்கு முன்பாக உதயநிதி மக்களின் ஆதரவையும், அபிமானத்தையும் பெற வேண்டும். அதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுக்காலம் மட்டுமே உள்ளது. அதற்குள் அவர் செய்து முடிக்க வேண்டும் என்பது அவருக்கு இருக்கும் சவாலாகும்.
விஜய் vs உதயநிதி: 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் பெரும் இளைஞர் பட்டாளத்துடன் தேர்தல் களத்திற்கு வருகிறார் என்றால், அதற்கு இணையான இளைஞர்கள் பட்டாளமோ அல்லது அதை சமாளிக்கும் வகையில் தனக்கும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது என்பதை உதயநிதி நிரூபிக்க வேண்டும்.
இதற்கு சட்டமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ இருந்து செய்வதை விட துணை முதலமைச்சராக செய்தால் அவருடைய செல்வாக்கு கூடும். அதற்காக தான் அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய், திராவிட சித்தாந்தத்தில் தான் அரசியல் பயணம் இருக்கும் என போதிய அறிகுறிகள் கொடுத்துவிட்டார்.
உதயநிதியை முன்னிறுத்த வேண்டிய கட்டாயம் என்பதை தற்போது துரிதப்படுத்தியுள்ளது. விஜய் தற்போதுதான் அரசியலுக்கு வந்தார் என்றும், உதயநிதி அமைச்சர், துணை முதலமைச்சராக இருந்து என்ன செய்தார் என்பதையும் மக்கள் பார்ப்பார்கள். எனவே, உதயநிதி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
உதயநிதி துணை முதல்வராக வரக்கூடாது என பொதுமக்கள் மத்தியில் கருத்து இருந்தாலும், அவை பெரிதாக வெளிப்படுத்தப்படவில்லை. அவரின் செயல்பாடுகளை பொறுத்துத்தான் பொதுமக்களிடம் அபிமானம் கூடுவதும் குறைவதும் இருக்கும். உதயநிதி என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: தமிழக அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தினர் அதிகரிப்பு.. அரசியல் பின்னணி என்ன?
அதிகரிக்கும் பொறுப்புகள்: 2026 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வு, கட்சியினரையும், கூட்டணிக் கட்சிகளையும் அனுசரித்து செல்வது, மாவட்ட செயலாளர்களை சமாளிப்பது, ஆய்வுக் கூட்டம் நடத்துவது, அரசுத் திட்டங்களை கவனிப்பது, மக்களுக்கு திட்டங்கள் போகிறதா என்பதை கவனிப்பது உள்ளிட்ட அவருடைய பொறுப்பு கட்சி ரீதியாகவும், அரசு நிர்வாக ரீதியாகவும் அதிகரித்திருக்கிறது.
அனைத்து துறைகளிலும் உதயநிதியின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பது பார்க்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலிலேயே உதயநிதி ஆதரவில் வந்த வேட்பாளர்கள் இருக்கிறார்கள். எனவே, 2026 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் தலையீடு இருக்கும். அந்த வகையில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சீட் உள்ளிட்ட அனைத்திலும் உதயநிதியின் செயல்பாடு இருக்கும்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். துணை முதலமைச்சராக அவர் பொறுப்பு ஏற்ற நேரம், காலம், சூழல் எல்லாம் சுமுகமாக இருந்தாலும், வரும் விமர்சனங்களை அவர் செய்யும் வேலைகளும், திட்டங்களுமே அதனை சமாளிக்கும்.
2026 தேர்தலில் முதலமைச்சர் வாய்ப்பு?: துணை முதலமைச்சராக இருந்து, முதலமைச்சருக்கு துணையாக இருப்பாரே தவிர முதலமைச்சர் இடத்திற்கு வர வாய்ப்பில்லை. அப்படி வந்தால், திமுகவிற்கு எதிராகத்தான் அவை முடியும். மேலும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்புள்ளது. ஆட்சியில் பல குறைபாடுகள் இருந்தாலும், மக்கள் மத்தியில் இந்த முதலமைச்சரும், அரசும் வேண்டாம் என்ற கோபம் என்பது இல்லை.
மக்கள் பார்வையில் மு.க.ஸ்டாலினும், உதயநிதியும்: உதயநிதி தன்னை முதன்மை படுத்திக்கொள்ள நினைக்கிறார் என்றாலும், அவர் தனியாக செய்வதால் எந்த பயனும் இல்லை. கூட்டணிக் கட்சிகளும் மக்களும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இருக்கிறது. மு.க.ஸ்டாலினையும், உதயநிதியையும் மக்கள் வேறுபடுத்தித்தான் பார்க்கிறார்கள்.
தனியொரு அணி: துணை முதலமைச்சர் வாய்ப்பு அரசியலில் கிடைத்துள்ளது. ஆனால், அதனை எப்படி பயன்படுத்த போகிறார் என்பது அவர் கையில்தான் உள்ளது. கட்சியில் மாவட்ட ரீதியாக புதிய இளம் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் வர வாய்ப்புள்ளது. அந்தவகையில், உதயநிதி தனக்கென ஒரு அணியை உருவாக்க முயற்சி எடுக்க வாய்ப்புள்ளது" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்