தமிழ்நாடு

tamil nadu

"பதக்கம் வேண்டுமா.. ரூ.15 கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்"- பஜ்ரங் புனியாவால் பரபரப்பு! - Bajrang Punia on Vinesh Phogat

By ETV Bharat Sports Team

Published : Aug 15, 2024, 5:09 PM IST

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரது சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Vinesh Phogat (IANS Photo)

ஐதராபாத்: பாரீஸ் ஒலிம்பிக்கில் தனக்கு வெள்ளிப் பதக்கம் வேண்டும் என்று இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அதனை விமர்சிக்கும் வகையில் எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா.

அதோடு சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், அந்தப் பதிவில் கையில் தேசியக் கொடியை ஏந்திய வினேஷ் போகத்தை காவல் துறையினரின் அடக்குமுறைக்கு உள்ளாக்குவது போன்ற படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், "நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்கள்" என்று பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக அவர் பதிவு செய்த மற்றொரு ட்வீட்டில், "இருள் நேரத்தில் உங்கள் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளதாக நான் நம்புகிறேன். உலக அளவில் வைரத்தை போல நீங்கள் மின்னுகிறீர்கள். நீங்கள் தேசத்தின் கோஹினூர். பதக்கம் வேண்டுமென விரும்புவோர் அதனை ரூ.15 கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார்.

தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். அதில், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டது.

தொடர்ந்து வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக நடுவர் மன்றம் தீர்ப்பு அளிக்காமல் காலம் தாழ்த்தியது. இந்த சூழலில் நேற்று (ஆக.14) அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சொல்லி அவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜனவரியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தை தொடங்கினர்.

இதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் முக்கிய அங்கம் வகித்தனர். பல வாரங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிஜ் பூஷணுக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிரதமர் மோடிக்கு துப்பாக்கி பரிசளித்த மனு பாக்கர்! பாரீஸ் ஒலிம்பிக் இந்திய அணியுடன் மோடி சந்திப்பு! - PM Modi met India Olympic athletes

ABOUT THE AUTHOR

...view details