தமிழ்நாடு

tamil nadu

"இவர் ஒருவர் மட்டும்தான் எங்கள் அணி மீது நம்பிக்கை வைத்தார்" - ரஷித் கான் கூறியது யாரை? - T20 World Cup 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 5:11 PM IST

Afghanistan qualify playoffs: நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் பேசியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் (credits - AP Photos)

செயின்ட் வின்சென்ட்:செயின்ட் வின்சென்ட் நகரில் டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இரு அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே அடித்தது. இருப்பினும், தன் அசாத்தியமான பந்து வீச்சால் முழு மனதுடன் போராடி வங்கதேச அணியை 105 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், தங்கள் அணியின் செயல்பாடு குறித்து ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் பேசியுள்ளார்.

அதில், "எங்களுக்கு அரையிறுதியில் விளையாடுவது என்பது கனவு போன்றதாக உள்ளதாக தெரிவித்தார். இந்த தொடரை நாங்கள் தொடங்கிய விதம் தான் இது அனைத்துக்கும் காரணம் எனவும், நியூசிலாந்து அணியுடனான போட்டியில் நாங்கள் வென்ற போது எங்களுக்கு நம்பிக்கை கிடைத்ததாக கூறினார்.

மேலும், இது குறித்து பேச எனக்கு வார்த்தைகளே இல்லை எனவும், இந்த சாதனையை எண்ணி எங்கள் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நிச்சயம் மகிழ்ச்சியில் இருப்பார்கள் எனவும் தெரிவித்தார். எங்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என தெரிவித்த ஒரே நபர் பிரைன் லாரா ஒருவர் மட்டும்தான் எனவும், இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு அவர் சொல்லை நாங்கள் நிச்சயம் காப்போம் என உறுதி அளித்ததாக தெரிவித்தார். இதனால் எங்கள் அணியை எண்ணி பெருமை கொள்வதாக கூறினார்.

வங்கதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் 130 முதல் 135 ரன்கள் எடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைத்ததாகவும், ஆனால் அதைக் காட்டிலும் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாகவே எடுத்திருந்ததாக தெரிவித்தார். இந்நிலையில், இலக்கை 12 ஓவர்களில் கடந்து, அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென முயற்சிப்பார்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம் எனவும், ஒரு வகையில் அது எங்களுக்கு சாதகமாகவும் அமைந்தது என கூறினார்.

நன்றாக பந்து வீச வேண்டுமென திட்டமிட்டோம் எனவும், எங்களது திறன் மீது 100 சதவீதம் நம்பிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார். மழை வந்தாலும் அரையிறுதி செல்ல 10 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்பதை திட்டமிட்டதாகவும், இதற்கு குல்பதின் நைப் நன்றாக இருப்பார் என நம்பினோம். அதேநேரம், அவர் எடுத்த அந்த விக்கெட் மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்தார்.

டி20 கிரிக்கெட்டில் எங்களது பலமே பந்து வீச்சு தான் என தெரிவித்தார். அதே நேரத்தில் எங்களது பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தில் சிறந்த தொடக்கத்தை அளித்து வருவதாகவும், அது அணியின் பந்து வீச்சுக்கு மேலும் பலம் கூட்டுகிறதாகவும் தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் எங்கள் அணியின் செயல்பாடு அற்புதமாக இருந்ததாக தெரிவித்தார். இப்போது அரையிறுதியில் விளையாடவுள்ளது எங்களுக்கு மிகப்பெரிய சாதனை என்றும் அரையிறுதியில் தெளிவான மனதுடன் விளையாடுவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வரலாற்றில் முதல் முறை.. டக் வொர்த் லூவிஸ் முறையில் சாதித்த ஆஃப்கானிஸ்தான்.. அரையிறுதிக்கு தகுதி!

ABOUT THE AUTHOR

...view details