ராணிப்பேட்டை: சோளிங்கரில் அரை மணி நேரத்தில் பல்வேறு இடங்களில், ஆறு பேரை வெறிநாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது. அதனால், பலத்த காயம் அவர்கள் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் வெறிநாயைப் பிடிக்க நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளதாகவும், ஒவ்வொரு தெருக்களிலும் சுமார் 10 முதல் 15 நாய்கள் வரை சுற்றித் திரிவதாகவும், பகல் நேரங்களில் இரவு நேரங்களில் எனப் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தனபால் (60), தமிழ்ச்செல்வி (23), பாரதி (40) ஆகியோரை வெறிநாய் ஒன்று திடீரெனத் தாக்கி கடித்துவிட்டு, அங்கிருந்து ஓடியுள்ளது. நாய் கடித்ததில் அந்த மூன்று பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சுலோச்சனா (60) என்பவரையும், பாட்டி குளம் பகுதியில் தண்ணீர் கேன் போடச் சென்ற நரசிம்மன் (59), தனியார் கம்பெனிக்குச் சென்று கொண்டிருந்த குமார் என்பவரையும் கடித்துள்ளது. தற்போது, வெறிநாய் கடித்ததில் மொத்தமாக 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "பிரபாகரன் புகைப்படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" - நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!
இந்த நிலையில், வெறிநாய் கடித்து பாதிக்கப்பட்ட அனைவரும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அரை மணி நேரத்தில் ஆறு பேரை கடித்த வெறி நாயால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். தற்போது, பொதுமக்களை அச்சுறுத்தி வரும் வெறிநாயை, நகராட்சி நிர்வாகம் உடனடியாக பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.