சென்னை: இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன் என்றாலே வித்தியாசமான படங்கள் மட்டுமல்லாமல் வித்தியாசமான செயல்களுக்கும் எழுத்துக்கும் பெயர் போனவர். ஒரு விஷயத்தில் அவரது கோணமும் வார்த்தைகளும் வித்தியாசமாகத்தான் இருக்கும். இதனாலயே ரசிகர்களின் பாராட்டுக்கும் கிண்டலுக்கு ஆளாகி வருபவர் நடிகர் பார்த்திபன். ஆனாலும் அவரது வித்தியாச பார்வையை கைவிட்டதில்லை.
நேற்று(பிப்.14) உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் பிரபலங்களில் இருந்து சாதரணமானவர்கள் வரை தங்களது காதல் வாழ்த்துகளை இணையத்தில் பகிர்ந்தனர். பல்வேறு புதிய படங்கள் குறித்த அறிவிப்புகள், காதலை மையப்படுத்திய பாடல்கள் உள்ளிட்டவையும் நேற்று வெளியிடப்பட்டன.
இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இளையராஜா இசையில், சீமான் இயக்கத்தில் தான் நடிக்கவிருந்து பின்னர் கைவிடப்பட்ட படத்திற்கு ‘காதல் ஒழிக’ என்று தலைப்பு வைத்ததை நினைவுகூர்ந்து காதலர் தின பதிவாக இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருந்தார் என போஸ்டர் மூலம் தெரிகிறது.
பார்த்திபனின் பதிவில், சமீபத்தில் சீமான் பெரியார் குறித்து பேசியதையும் குறிப்பிட்டு காட்டி எழுதியுள்ளார். மேலும் காதலை குறித்தும் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
பார்த்திபன் எழுதியுள்ள அந்த பதிவில், “காதல் ஒழிக ‘ இன்றைய அரசியலில் தவிர்க்க இயலா கர்ஜனை நண்பர் சீமான் அவர்கள் இயக்க நான் நடிப்பதற்காக கால் நூற்றாண்டுக்கு முன் இதே நாளில் வைக்கப்பட்ட தலைப்பு. படம் கை விடபட்டாலும் நட்பு அப்படியே ஒருவரை ஒருவர் ரசித்தபடி தொடர்கிறது. என் சில கவிதைகளை அவர் சிலாகித்து மேடையில் பாராட்டும் போது அந்தக் கவிதைகளில் உள்ள கருத்து விதைகளில் சில புதூ தளிர்கள் துளிர்க்கச் செய்கிறது. நானும் ஒரு ஒலி வாங்கிப் போல் அவர் பேச்சை மிக அருகில் இருந்து ரசிப்பேன்.
இதையும் படிங்க: தனது பாடலுக்கே ரீல்ஸ் செய்த விக்னேஷ் சிவன்... காதலர் தின ட்ரெண்டிங்கில் சேர்ந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்
இருவரின் அரசியலும் தத்துவமும் கருத்தும் விருப்பமும் வெவ்வேறாக இருப்பினும், ‘கடவுள் இல்லை’ - பெரியார் ‘பெரியாரே இல்லை’ - சீமான் அவரவரது குரலை உரக்க ஒலிக்கச் செய்வதாகவே நான் பார்க்கிறேன். நானும் அப்படியே எனக்கு சரியெனப் பட்டதை பட்டவர்த்தனமாக பேசுகிறேன். (அரசியல் +இன்ன பிற லாப நோக்கின்றி)
புரிந்தோர் பிஸ்தாக்கள் புரியாதோர் பிஸ்கோத்துகள்! சரி காதலுக்கு வருவோம் ! வருவதும் போவதும் வாடிக்கையே காதலுக்கு. வருவதெல்லாம் போவதும் வாடிக்கையே சாதலுக்கு! என்றோ மிடித்துப்போனது இன்று பிடிக்காமல் போய் சீமான் சுவரில் பெரியார் புகைப்படம் போல தான் இந்தப் பாழாய் போன காதலும் .
‘என் இதயத்தில் அவள் அடித்து விட்டுச் சென்ற ஆணியில் கூட அவள் புகைப்படத்தைதான் மாட்டி விட்டிருக்கிறேன்’ என என் நண்பர் ஒருவர் எழுதியதைப் போல….
போன வருடம்
போன காதல்
வேறு பூமியில்
வேர் பிடித்துப் பூத்துக் குலுங்கும் .-அது
புரியாத-இன்னும்
பிரியாத -உயிர்வரை
பிரிந்திடாத ஒரு
காதலை
‘காதல் ஒழிக’ என
இக் காதலர் தினத்தில்
கொண்டாடும்!- புதிதாய்
பூத்தவர்கள்
பூத்தரேக்குலு சுவைத்து
கொண்டாட்டும்,
தோத்தவர்கள்
காத்திருங்கள்...
அவளை/அவனை
சுமந்து கர்ப்பமான இதயத்தில்
கன்றாவி கவிதையாவது பிறக்கலாம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா காதல் உய்க்கும் - பின்
பொய்க்கும்” என குறிப்பிட்டுள்ளார்.